Bread of Life Church India

விருத்தியாகும் வாழ்வு

“இந்த தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’’ (ஆதி 26:3)
    ஆண்டவர் குறிப்பிடும் எல்லைக்குள் இருந்து செயல்படும் போது தேவனாகிய கர்த்தர் நம்முடன் இருந்து நம்முடைய செயல்களைப் பெருக செய்கிறார். நன்மையாக மாற்றுகிறார். இது தான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
    கர்த்தர் நம்மை ஒரு எல்லையில் நிறுத்துவதின் நோக்கமே நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்கிறோமா? என்பதை காண்பதற்காகவே.
        மேலே நாம் வாசித்த தேவனுடைய வார்த்தையானது ஈசாக்கினிடத்தில் தேவன் சொன்ன வார்த்தை, அது எந்த சூழ்நிலையில்  சொல்லப்பட்டது என்பதை பார்த்தால் பஞ்ச காலத்திலே எகிப்திற்கு போக புறப்பட்ட ஈசாக்கினிடத்தில் “நீ எகிப்திற்கு போக வேண்டாம், இந்த தேசத்தில் வாசம் பண்ணு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்பதாகும்.
ஈசாக்கும் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து கேராரூரிலேயே தங்கி விட்டான்.
         தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தத்தின் படி கீழ்ப்படிந்து நடந்தால் என்ன ஆசீர்வாதங்கள் உண்டாகும் என்பதைக் குறித்து அடுத்து அடுத்து உள்ள வசனங்கள் விவரித்து காண்பிக்கின்றன.

   சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால், சூழ்நிலைகளை தேவன் மாற்றுவார்.
தேவன் நம்மை வைத்திருக்கும் இடத்திலும், ஸ்தானத்திலும் இருந்தால் தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளலாம். பலவேளைகளில் ஏற்படுகிற பிரச்சனைகளுக்கும்.இக்கட்டுகளுக்கும் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் தேவன் வைத்திருக்கும், இடத்தையும், ஸ்தானத்தையும் விட்டு விலகி இருப்பது தான் என்பது நன்றாக விளங்கும்.
  சூழ்நிலைகள் மாற மாற மனிதர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள்,அல்லது தங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் தேவன் எங்கு இருக்க சொல்கிறாரோ, அங்கு இருந்தால்தான் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
           யூதா தேசத்தில் பெத்தலகேம் ஊரானாகிய எலிமெலேக்கு என்ற மனிதன் தேசத்திலே பஞ்சம் ஏற்பட்ட போது, தன் குடும்பத்துடன் மோவாப் தேசத்திற்கு செல்கின்றான்.
      “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும், இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய் சஞ்சரித்தான்.
       அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்து விட்டார்கள்’’ (ரூத் 1:1,2) என்று வேதம் கூறுகிறது.
       கர்த்தர் அவர்களை வைத்திருந்த இடத்தை விட்டும், ஸ்தானத்தை விட்டும், கர்த்தருடைய ஆலோசனை இல்லாமல் போனதால் அந்த குடும்பம் இழந்தவைகள் அதிகம். என்பதை அடுத்து உள்ள ரூத் 1:3-5 வரை உள்ள வசனங்களில் வாசிக்கலாம்.
          பஞ்சமாக இருந்ததினால்தானே அவர்கள் அந்த தேசத்திற்கு சென்றார்கள் என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனிதர்களாகிய நாம் காரணங்களை சொல்லலாம்.
      ஆனால் தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திலே குடியிருக்க செய்திருக்கிறார்.
     தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பஞ்சத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத எலிமெலேக்கின் குடும்பம், மோவாப் என்ற தேசத்திற்கு செல்கிறது.
அங்கே, எலிமெலேக்கு அவனுடைய இரண்டு மகன்களும் செத்து போனார்கள் என்று வேதம் சொல்கிறது.
       இன்றைக்கு இடமோ, பொருளோ, முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. ஆனால் தேவன் வைத்திருக்கும் ஸ்தானத்தில் நாம் இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் நாம் விலகி சென்றால் நம்முடைய விசுவாசம் செத்து போய் விடும். கவனம் தேவை.
       எதிரான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க தேவனுடைய ஆலோசனை இல்லாமல், தேவ சித்தத்தை அறிந்து கொள்ளாமல் சுய விருப்பத்துடன் முடிவெடுத்தால் அதற்காக பிரதிபலன்களை பெற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
      நம்முடைய காரணங்கள் எதுவும் தேவனிடத்தில் செல்லாது, காலத்தையும், நேரத்தையும் தேவன் தம்முடைய கரத்தில் வைத்திருக்கிறார்.
எந்த ஒரு பிரச்சனைகளையும் மாற்றுவதற்கு அவர் வல்லமை உள்ளவராகவே இருக்கிறார். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நாம் தேவனை சார்ந்து கொண்டு தேவனையே மகிமைப்படுத்த வேண்டும்.
             எனவே இக்கட்டான நேரத்திலும் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தேவனையே, கேட்டு, தேவன் கொடுக்கும் ஆலோசனைகளின் படி நடந்து கோள்ள வேண்டும்.
   சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது மிகவும் கவனமுடன் தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுதல்தான் மிக மிக நல்லது.
      இல்லை என்றால் அதை விட மோசமான இக்கட்டிற்குள்ளாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
          இதுதான் எலிமெலேக்கு, நகோமியின் குடும்பத்திற்கு ஏற்பட்டது.
ஆனால் ஈசாக்கு தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தேவன் சொன்ன தேசத்திலேயே குடியிருந்தான். அதனால் அவனை தேவன் எவ்விதமாக ஆசீர்வதித்தார் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

 முழுமையான ஆசீர்வாதம்

    “ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்திலே நூறு மடங்கு பலன் அடைந்தான்’’ (ஆதி 26:12).
        தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவன் சொன்ன, தேசத்திலும், இடத்திலும் இருந்தபடியால் கர்த்தர் ஆசீர்வதித்தார் நூறு சதவீதம். அதாவது முழுமையான பலனை பெற்றுக்கொண்டான்.
ஈசாக்கு நூறு மடங்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதற்கு காரணம் சூழ்நிலைகளை பார்க்காமல், சூழ்நிலைகளை மாற்றுகிற கர்த்தரை நோக்கி பார்த்தான்.
        மனிதர்கள் அனைவருக்குமே நூறு மடங்கு நன்மைகளை பெற்றுக்கொள்ள ஆசைதான், ஆனால் சிலருக்கு, கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதிலே அவ்வளவு ஆர்வம் இல்லை. கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் நூறு மடங்கு நன்மைகள் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது.
     சில நாட்களுக்கு முன்பு ஒரு சகோதரி தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஜெபிக்கும் படி வந்திருந்தார்கள்.
அவர்களை விசாரித்த போது,  சில மாதங்களாகவே அவர்கள் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கிறார்கள் ஆனாலும் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குணமாக வில்லை. ஆகையால் என் கணவருக்காக ஜெபிக்க வந்திருக்கிறேன் என்றார்கள்.
       உங்கள் கணவரை அழைத்து வரவில்லையா என்று கேட்டேன், அதற்கு அவர்கள், அவரால் நடக்க முடியவில்லை என்றார்கள். உடனே நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் கணவருக்காக ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்து சுகம் தருவார் என்று சொன்னேன். அவர்களோ, தயங்கினார்கள்.
      சிறிது நேரம் சென்ற பின் ஏன் வீட்டுக்கு வந்து ஜெபிப்பதற்கு  உங்கள் வீட்டில் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்று கேட்டேன். “அப்படி எல்லாம் இல்லை. யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், என் கணவரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார். ஆனால் நீங்கள் வந்து ஜெபித்தால் நாங்கள் வணங்கும் தெய்வம் எங்கள் குடும்பத்தை விட்டு போய் விடும் அதனால்தான் வேண்டாம் என்று சொல்லுகிறேன். எனவே  இங்கு இருந்தே அவர் பெயரை வைத்து ஜெபிக்க வந்தேன், அப்படியே அவருடைய பெயரை வைத்து ஜெபியுங்கள் என்றார்கள்.
      நான் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல், “சரி ஜெபிக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, “இயேசு கிறிஸ்து உங்கள் கணவருக்கு சுகம் கொடுக்க வேண்டுமானால் அவரை சபைக்கு அழைத்து வாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினேன்.
          இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஜனங்களின் அறியாமை எவ்வாறாக உள்ளது பாருங்கள். இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவர் என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு தயங்கு கிறார்கள்.
        நன்மை மட்டும் வேண்டும் இயேசு கிறிஸ்து வேண்டாம், அவருடைய வார்த்தைகள் வேண்டாம். நான் என் விருப்பத்துடனே நடந்து கொள்வேன். ஆனால் இயேசு கிறிஸ்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும். இதுதான் இன்று அநேகருடைய எண்ணங்களாக இருக்கிறது.
   இயேசு கிறிஸ்துவிடம், வராமலோ, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமலோ, முழுமையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.   
         இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் கிடைக்காமல், சோர்வோடு, வலைகளை அலசிக்கொண்டிருந்த பேதுருவின் படகில்  ஜனங்களுக்கு போதகம் பண்ணுவதற்காக ஏறின இயேசு கிறிஸ்து  போதித்து முடித்த பின், “சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்’’ (லூக்கா 5:4)
     ஆனால் பேதுருவோ, நாங்கள் இப்போது மீன் பிடிக்க வரவில்லை. ஏற்கனவே இரவு முழுவதும் பிரயாசப்பட்டு விட்டோம் ஒன்றும் கிடைக்க வில்லை என்று, சொல்லுகிறான்.
       “அதற்குச் சீமோன்: ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை ; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’’ (லூக்கா 5:5) என்று சொல்லி உடனே இயேசு கிறிஸ்து சொன்ன இடத்தில் வலையை போடுகிறான்.
         இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு மறுத்து பேசாமல் உடனடியாக பேதுரு இயேசு கிறிஸ்து சொன்ன இடத்தில் வலையை போட்டபடியால் “அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்’’ (லூக்கா 5:6) என்று வேதம் கூறுகிறது.
     நன்மை வேண்டும் என்று பிரயாசப்படுகிறவர்கள் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிதல் என்பது மிக மிக அவசியமாக இருக்கிறது.
    என்னதான் பிரயாசப்பட்டாலும் தேவனுடைய ஆசீர்வாதம் இல்லை என்றால் அதில் பலனைக்காண முடியாது என்பதை முதலாவது அறிந்து கொள்ள வேண்டும், தேவனுடைய ஆசீர்வாதம் வேண்டுமானால், தேவனுடைய வார்த்தைகள் என்ன சொல்லுகிறதோ, அதன் படியாக கேட்டு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இதுதான் தேவன்  வைத்திருக்கும் நியமங்களும், வழிகளும், இந்த வழியில்லாமல், நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு வேறு வழிகளை தேவன் வைக்கவே இல்லை.
    எனவே ஈசாக்கும், பேதுருவும், முழுமையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதற்கு அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தையின்படியே நடந்து கொண்டதால்தான்.
       அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நம்முடைய வாழ்க்கையிலும், நாம் நூறு மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கு வேதம் நமக்கு காண்பித்துக்கொடுக்கும் வழியும் இதுதான்.

பெருக்கமான ஆசீர்வாதம்.

   “அவன் ஐசுவரியவானாகி, வர வர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்’’ (ஆதி 26:13)
       தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்து பெருக செய்கிறார், ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கிடத்திலும் தொடர்ந்து வர அவன் எல்லாவற்றிலும் விருத்தியடைந்தான் என்று வேதம் கூறுகிறது.
அவனை சுற்றி இருந்தவர்களே கண்டு பிரமித்து பொறாமைப்படும் அளவுக்கு  தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்து பெருக செய்தார்.
      இந்த இடம் வேண்டாம். வேறு இடத்திற்கு போய் விடலாம். இங்கு இருந்தால் சூழ்நிலைகள் சரியில்லை. இங்கு இருந்தால் பஞ்சம் நம்மை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும் என்று புறப்பட்ட ஈசாக்கை அதே இடத்தில் இருக்க வைத்து எல்லா கண்களும் காண கர்த்தர் உயர்த்தி காண்பித்தார்.
        இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், அது கர்த்தர் சொல்லும் இடமாக இருக்க வேண்டும். கர்த்தர் கூட இருக்க வேண்டும். கர்த்தர் கூட இருப்பாரானால் எல்லா இடமும் நல்ல இடம்தான். எல்லா நாளும் நல்ல நாள்தான்.
         காலநேரம் பார்ப்பது, நல்ல நாள் பார்ப்பது, ராசி பார்ப்பது, சகுனம் பார்ப்பது இதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது. கர்த்தர் ஒரு மனிதனோட கூட இருந்தால்தான் நல்ல நேரம், கர்த்தர் இல்லாத எல்லா நேரமும் மனிதனுக்கு கெட்ட நேரந்தான்.
     இன்று மனிதர்கள் தங்கள் ஒவ்வொரு செயலும் அங்கீகரிக்கப்பட்டு, எல்லாவற்றிலும் ஆசீர்வாதமாக இருந்து எல்லாவற்றிலும் விருத்தியடைய வேண்டும் என்று எதை எதை எல்லாமோ செய்து பார்க்கிறார்கள்.
       ஆனால் வேதம் தெளிவாக சொல்லுகிறது, கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவி சாய்த்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு இருக்கும் தேவ பிள்ளைகளே, சகல நன்மைகளினாலும், ஆசீர்வாதங்களினாலும் நிரப்பப்படுகிறார்கள்.
             எனவே, நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மை எந்த ஸ்தானத்தில்  வைத்திருக்கிறாரோ, அதில் உண்மையாகவும், நேர்மையாகவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கும் போது, நம்முடைய வாழ்க்கை எல்லாவற்றிலும் விருத்தியடையும்.
   தேவனோடு உள்ள வாழ்க்கையில் நாம் எந்த அளவுக்கு விருத்தியடைகிறோமோ, அந்த அளவுக்கே நம்முடைய வாழ்க்கையில் நாம் விருத்தியடைந்தவர்களாக இருக்கிறோம்.
   சிலர் தன்னைச் சுற்றிலும் இருக்கும்மனிதர்களையே, கவனித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெற்றுள்ள உயர்வுக்கு என்ன வழி முறைகளை கடைப்பிடித்தார்களோ, அதையே கடைப்பிடிப்பார்கள்.
         ஆனால் அதில் தோல்விதான் மிஞ்சும். காரணம் தேவன் தனக்கென்று என்ன வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதில்லை. மாறாக வெற்றி பெற்றவர்களை முன் மாதிரியாக வைத்து செயல்படுவார்கள். அது சரியான முறை அல்ல.
          ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு தனித்தன்மையை கொடுத்திருக்கிறார். அதன்படி செயல்பட்டால்தான் நம்முடைய வாழ்க்கை விருத்தியடையும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை செழிக்க வேண்டும். அதற்கு தேவன் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாரோ, அப்படியே நடந்து கொள்ள வேண்டும்.
           இதுதான் தேவனுடைய நிறைவான ஆசீர்வாதங்களுக்கும், பெருக்கமான ஆசீர்வாதங்களுக்கும் வழியாக இருக்கும்.
      எனவே, அன்பான தேவ பிள்ளைகளே, எந்த சூழலிலும் நாம் இயேசு கிறிஸ்துவோடு இருப்போம் கர்த்தர் நம்மை வழிநடத்துவாராக.




0 comments:

Post a Comment