Bread of Life Church India

நம் கரங்கள் இணைந்தால்......

கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாக உங்களுடன் பேசும்படியாக உதவி செய்து வரும் தேவனை நன்றி நிறைந்த இருதயத்துடன் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் தேவைகளை சந்தித்து, இந்த ஊழியங்கள் சிறப்பாக நடைபெறவும், மாத இதழ் வெளியிடவும், அநேக ஆத்துமாக்களை சந்தித்து, சத்தியத்தை அறிவிக்கவும், இரக்கம் பாராட்டி வரும் தேவாதி தேவனை துதிக்கிறேன்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நம்முடைய வாழ்வு, ஏனோ, தானோ என்ற வாழ்வு அல்ல, அர்த்தம் நிறைந்த வாழ்வு, நோக்கம் இல்லாமல் தேவன் நம்மை தெரிந்து கொள்ள வில்லை, திட்டமில்லாமல் நம்மை இரட்சிக்கவும் இல்லை.

நம்மைக்குறித்த நோக்கமும், திட்டமும் தேவனிடத்தில் உண்டு, அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அறிந்தால் மட்டுமே நம்முடைய பொறுப்புக்கள் நமக்கு தெரியும், நம்முடைய பொறுப்புக்கள் நமக்கு தெரிந்தால்தான் அதை சரியான விதத்தில் செயல்படுத்த முடியும்.
உலகம் செல்லும் திசையெல்லாம் நாமும் செல்லும்படியாக தேவன் நமக்கு தம்முடைய ஜீவனைக்கொடுக்க வில்லை. தேவனுடைய வழியில் நாம் செல்லவும், உலக மனிதர்களை இயேசு கிறிஸ்துவின் வழியில் நடத்தவுமே, கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள்ளாக இருக்கிறது.
கிறிஸ்து எனக்கு ஜீவன் என்று நாம் சொன்னால் மட்டும் போதாது, கிறிஸ்துவின் ஜீவனோடு வாழ்ந்து, கிறிஸ்துவை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
வழி தவறி சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் தேவனுடைய வழியில் செல்ல நாம் வழிகாட்டிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதற்காக எந்த விதமான எதிர்ப்புக்களையும் எதிரில் நின்று சந்திக்கும் போது, ஆவியானவர் நமக்கு உதவியாக இருந்து நம்மை பெலப்படுத்தி நடத்துவார்.
சத்தியம் மட்டுமே, சத்தானவர்களை உருவாக்கும், சத்தியவான்கள் எழும்பினால் மட்டுமே, சரித்திரம் திரும்பி பார்க்கும். சத்தியத்தை அறிந்தவர்கள் சத்தியவான்களல்ல, சத்தியத்தை கைக்கொண்டு வாழ்கிறவர்கள் தான் சத்தியவான்கள். சத்தியம் விதைக்கப்பட்டால் மட்டுமே, தேசத்தில் சமாதானம் முளைக்கும்.
நாம் அறிந்தவர்களாய், அறிந்து கைக்கொள்கிறவர்களாய், விதைக்கிறவர்களாய், சமாதானத்தை அறுவடை செய்கிறவர்களாய் இருப்போம்.
தூங்கினால் கூட காலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டும்,  இல்லை என்றால் நம்மை அடக்கம் பண்ணிவிடுவார்கள் என்று சொல்வார்கள். அது போலவே, நம்முடைய செயல்பாடுகள்தான் நாம் கிறிஸ்துவின் ஜீவனோடு இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொண்டே இருக்கும்.
ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகள், சும்மா இருப்பது எப்படி, கர்த்தர் கொடுத்திருக்கும் கிருபைகளை பயன்படுத்தி, அநேகர் கிறிஸ்து இயேசுவை அறிந்து, விடுவிக்கப்படவும், கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும், நாம் செயல்பட்டே ஆகவேண்டும். இதுவே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
இதன் அடிப்படையிலும், தேவனுடைய அழைப்பிலும், தேவனுடைய கிருபையிலும் நமது ஜீவ அப்பம் ஊழியங்களும், ஜீவ அப்பம் மாத இதழும் நடந்து வருகிறது.
அன்பான தேவ பிள்ளைகளே, நமது ஜீவ அப்பம் மாத இதழ் தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கும் பணியை செய்துவருகிறதையும், இதனுடைய செயல்பாடுகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த பணியை ஒருவர் மட்டும்  செய்வது என்பது கூடாத காரியம், இணைந்து செயல்படவே, தேவன் நம்மை இணைத்திருக்கிறார். இதில் உங்கள் பங்கும் இருக்குமானால், அதில் தேவன் மகிழ்ச்சியடைவார். இன்னும் இந்த ஊழியத்தின் எல்லைகள் விரிவடைந்து, அநேகருக்கு தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கவும், அதனால் அநேகர் ஆசீர்வதிக்கப்படவும் முடியும்.
ஜெபியுங்கள் கர்த்தர் உங்களோடு பேசினால் நீங்கள் இணைந்து செயல்படலாம். நாம் இணைந்து தேவனுடைய இராஜ்யத்தை கட்டலாம்.
தொடர்ந்து உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம். தேவன்தாமே, செழிப்பையும், சமாதானத்தையும் தந்து, மென்மேலும் தேவ கிருபையில் வளர உதவி செய்வாராக ஆமென்.



0 comments:

Post a Comment