Bread of Life Church India

அமாவாசை சிறப்பானதா?


எப்படியாகிலும் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி உலகமெங்கும் செல்ல வேண்டும். எல்லா மக்களும் இயேசு கிறிஸ்துவின் விடுதலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் துளி அளவும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இன்று அறியாமையில் நடைபெறும் சில தவறுகளை அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டால், அதுவே அடுத்த தலைமுறையினருக்கு நாம் தவறான முன் உதாரணமாகவும், அவர்கள் கிறிஸ்துவை விட்டு வேறு எதையாவது பிடித்துக்கொள்வதற்கும் வழி அமைத்துக்கொடுப்பதாக இருந்து விடக்கூடாது.
இக்காலத்திலே கிறிஸ்தவத்தில் வேதத்தின் அடிப்படையை விட்டு, விரும்பத்தகாத காரியங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. காரணம். தன் சுய அனுபவங்களை முன் வைத்து செயல்படுவதால்தான். அவைகளில் ஒன்றுதான்அமாவாசை, பவுர்ணமி என்ற பெயரில் நடைபெறும் ஜெபங்கள். இது இந்நாட்களில் ஒருவரைப் பார்த்து, ஒருவர், அவரைப்பார்த்து இன்னொருவர் என்று பெருகிக் கொண்டிருக்கிறது.
ஜெபம் எந்த நாளிலும் வைக்கலாம்,எந்த நாளையும் சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தலாம். சிலர் குறிப்பிடுவதுபோல் அமாவாசை நாளிலும் வைக்கலாம். ஆனால் அதற்கு “அமாவாசை ஆசீர்வாத ஜெபம் ?’’ “அமாவாசை விடுதலை ஜெபம்? ‘’ அமாவாசை அற்புத ஜெபம்?’’ என்று பெயர் சூட்ட வேண்டாம் என்பதே இந்த செய்தியின் சாரம்.
ஏன் பெயர் சூட்டக்கூடாது? என்று கேட்பவர்களுக்கு, அமாவாசைக்கும் கிறிஸ்துவுக்கும் என்ன சம்மந்தம். அதே போல் அமாவாசை பிரபலமாகும் அளவிற்கு, சுவிசேஷமோ, கிறிஸ்துவோ, அமாவாசையை தேடி வரும் மக்களுக்குள்ளாக பிரபலமாகாதிருப்பதுதான்.
அமாவாசையில் எதோ வித்தியாசம் நடக்கும் அதுதான் சிறப்பு,என்பதுதான் மக்களிடத்தில் இருக்கிறதே தவிர, கிறிஸ்துவிடத்தில்தான் எல்லாம் இருக்கிறது. அவரிடத்தில் எல்லா நாளும் சிறப்பு உண்டு என்பது மக்களிடத்தில் காணாமல் போகிறதே,
அமாவாசைக்கு சிறப்பு இருக்கிறதா? மற்ற மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் அமாவாசையைக் குறித்த சிறப்புகளும், பயங்களும் கலந்திருக்கிறது. ஆனால் மற்ற நாளுக்கும் அமாவாசைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே கிறிஸ்தவத்தின் விசுவாசம்.
அமாவாசைக்கு அர்த்தம் கற்பிக்க சிலர் பழைய ஏற்பாட்டில் வரும் சில வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். அந்த வசனங்களையும், அதன் பின்னணிகளையும், சம்பவத்தையும் வேதத்தின் வெளிச்சத்திலேயே ஆராய்வோம்.
இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான்’’  (2 இராஜாக்கள் 4:23) என்று சூனேமியாளின் கணவன் கேட்டதாக வேதம் நமக்கு காண்பிக்கிறது.
இந்த வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப்பட்ட நோக்கத்தை நேரடியாக நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது.
இஸ்ரவேல் மக்களுக்கு அமாவாசையே மாதத்தின் முதல் நாளாக இருந்தது. எனவே மாதத்தின் முதல் நாளிலேயே இஸ்ரவேலர்களின் பண்டிகைகள் ஆரம்பமாகும், அந்த  நாட்களிலேயே இஸ்ரவேலர்கள் தேவ சமூகத்திற்கு செல்வது உண்டு.
இதைக்குறித்து வேதாகமம் சொல்லுவதை கவனிப்போம்.
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் ’’ (எண்ணாகமம் 10:10)
உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்’’ ( எண்ணாகமம் 28:11).
மாதத்தின் முதலாம் நாளில் தேவ சமூகத்தில் வந்து பலி செலுத்த  தேவன் கட்டளை கொடுக்கிறதை மேலே உள்ள வசனங்கள் நமக்கு காண்பிக்கிறது.
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்’’ (1 நாளாகமம் 23:30) என்று மாதத்தின் முதலாம் நாளையே வேதம் அமாவாசை என்று சொல்லுவதை கவனிக்க வேண்டும். எனவே பழைய ஏற்பாட்டு வசனங்கள் முக்கியத்துவப்படுத்துவது அமாவாசையை அல்ல, மாதத்தின் முதலாம் நாளை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
எல்லா புறவின மக்களும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) சூரியனை வைத்து தங்கள் நாட்குறிப்புக்களை வைத்திருக்க, இஸ்ரவேல் மக்களின் நாட்குறிப்புக்கள் சந்திரனை வைத்தே குறிக்கப்படுவதால் இஸ்ரவேலர்களுக்கு அமாவாசை அன்றே மாதத்தின் முதல் நாளாக கணக்கிடப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது.
எனவே இஸ்ரவேலர்கள் ஓய்வு நாளை எப்படி கடைப்பிடித்தார்களோ, அதே போன்று, மாதத்தின் முதலாம் நாளிலும் தங்கள் பண்டிகை நாட்களை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
ஆகையால்தான் தன்னுடைய மகனை பிழைக்க வைக்கும் படி தேவ மனிதனாகிய எலிசாவிடத்திற்கு ஆள் அனுப்பி அவரை வரசொல்ல வேண்டும் என்று தன் கணவனிடத்தில் சொன்னபொழுது விஷயம் அறியாத சூனேமியாளின் கணவன், இன்று மாதத்தின் முதல்நாளும்(அமாவாசி) இல்லை. ஓய்வு நாளும் இல்லையே பின்பு ஏன் அவரிடத்திற்கு போக வேண்டும்? என்று காரணம் கேட்கிறான்.
மேலும் வருடத்தின் முதல் மாதத்தில் முதலாம் நாள் மிகவும் விஷேசமாக கருதப்பட்டிருக்கிறது, ஆகையால்தான்  1 சாமுவேல் 20: 5,6 ல்  “தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்’’  என்று தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கும் சவுலுக்கு முன்பாக போகாமல் தப்பித்துக்கொள்வதற்கு வருடத்தின் முதலாம் மாதத்தில் முதலாம் நாளில் குடும்பமாக பலி செலுத்த செல்ல வேண்டும் என்று சொல்லச்சொல்லி தாவீது சொல்லுவதைதான் மேலே உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
இவ்வசனங்கள் அமாவாசயை முக்கியத்துவப் படுத்த வில்லை.  எனவே இவ்வசனங்களை மேற்கோள்காட்டி, அமாவாசை பழைய ஏற்பாட்டில் முக்கியத்துவப் படுத்தப்பட்டதாக கருதக்கூடாது.
இந்த வசனங்கள் மாதத்தின் முதலாம் நாளில் கர்த்தருடைய சமூகத்தில் செலுத்தப்படும் பலிகளையே முக்கியத்துவப்படுத்துகிறது.
இதைத்தொடர்ந்து புறவினத்தவரின் செயல்களான ஜோசியம், நட்சத்திரம் பார்க்கும் செயலுடன் அமாவாசி நாளை கணிப்பதையும் சுட்டிக்காட்டி, தேவன் கடிந்து கொள்வதை ஏசாயா 47:13 ல் வாசிக்கலாம்.
தேவனால் அமாவாசையை கணிப்பவர்கள் கண்டிக்கப்படுவதின் மூலமாக அமாவாசைக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.
இவைகள் மட்டுமல்ல, நமக்கு அமாவாசை மாதத்தின் முதலாம் நாள் அல்ல, நாம் இப்போது பயன்படுத்தி வரும் காலண்டர் முறைகள் சூரியனை வைத்தே கணிக்கப்பட்டு, அதைதான் நாம் நடை முறைப்படுத்தி வருகிறோம்.
மேலும் பழைய ஏற்பாட்டு, பலிகள் இயேசு கிறிஸ்தவின் மூலமாக நீக்கப்பட்டு, இன்று நம்மையே ஜீவ பலியாக தேவ சமூகத்தில் அர்ப்பணித்து தொழுது கொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.
நாட்கள், முக்கியத்துவப்படுத்தப்படாமல், கிறிஸ்துவே முக்கியத்துவ படுத்தப்படுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எல்லா நாளும் நாம் தொழுது கொள்ளவே வேதம் நமக்கு கற்றுத்தருகிறது.
எங்கு தொழுது கொள்ள வேண்டும் என்று கேட்ட சமாரியா ஸ்திரீயிடம், இயேசு கிறிஸ்து எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்று கூறுவதை யோவான் சுவிசேஷத்தில் வாசிக்கிறோம்.
எனவே இந்நாட்களிலும் அமாவாசை பெயரால் பலவித தலைப்புகளில்  நடத்தப்படும் ஜெப ஆராதனைகள் அமாவாசையை மட்டும் முக்கியத்துவப்படுத்தி, அமாவாசையை சிறப்பு நாளாக்கிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது.
மற்ற ஆராதனை நாட்களை விட எந்த விதத்திலும் அமாவாசை நாளிலே நடத்தப்படும் ஆராதனைகள் சிறப்பு இல்லை. ஆனால் கிறிஸ்துவை அறியாத மக்களிடத்திலும், ஏன் கிறிஸ்தவர்களிடத்திலும் கூட மற்ற ஆராதனைகளை விட அமாவாசை ஆராதனைகள் சிறப்பு ஆராதனையாக கருதப்பட்டு வருவதற்கு என்ன காரணம்.? அமாவாசை பெயரால் நடத்தி, அதற்கு சிறப்பு விளம்பரம் கொடுப்பதால்தான்.
இது நாளடைவில், மக்களை கிறிஸ்துவை விட்டு விலக்கி, அமாவாசையோடு ஐக்கியமாக்கி, அமாவாசைக்கு அடிமைப்படுத்தி விடும் கவனம் தேவை.
நமது தேச மக்களிடத்தில் அமாவாசை பயம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதை கிறிஸ்தவத்திற்குள்ளும் அனுமதிக்க வேண்டாம்.
தவறு செய்கிறவர்களுக்கும், திருடர்களுக்கும், மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறவர்களுக்கும், பிசாசின் ஆவிகளுடன் இணைந்து பில்லி சூனியம், மந்திரம், ஏவல் செய்கிறவர்களுக்கு இருட்டு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால்தான் கும் இருட்டான அமாவாசை நாளை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர அந்த நாளில் அவர்களுக்கும் சிறப்பு ஒன்றும் இல்லை.
எனவே  பிசாசுகளை விரட்டுவதற்கும், பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கும் நமக்கு அமாவாசை மட்டுமல்ல, இயேசுவின் நாமத்தில் எல்லா நாளும் சிறப்பான நாட்கள்தான். விடுதலை ஊழியமும், விடுதலை ஊழியரும் எல்லா நாட்களும் பிரகாசிப்பார்கள். இதுவே தேவன் அவர்களுக்கு தந்திருக்கும் சிறப்பு.
கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அன்றைய தினம் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்தாலும், அது நாளடைவில், அமாவாசையை முக்கியத்துவ படுத்துவதாகவே மக்கள் திருப்பி விடுகின்றனர்.
இந்த செய்தியின் வாயிலாக அறிவிக்கப்படும் செய்தியும், அறிந்து கொள்ள வேண்டிய செய்தியும் இதுதான். எந்த நாளிலும் ஆராதனை, ஜெபம் நடத்தலாம் நடத்தவே கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அமாவாசை ஜெபம், அமாவாசை ஆசீர்வாத ஜெபம், அமாவாசை விடுதலை ஜெபம், அமாவாசை சிறப்பு ஆராதனை என்ற தலைப்புக்களில் நடத்த வேண்டாம், இது அமாவாசையில் ஏதோ சிறப்பு இருக்கிறது என்பது போல் காண்பித்து விடும்.
எனவே விடுதலை ஆராதனை, ஆசீர்வாத ஆராதனை, நற்செய்தி ஆராதனை என்று பெயர் வைத்துக்கொள்ளலாம் அதற்கு முன்பாக இருக்கும் “அமாவாசை’’யை நீக்குவதே நல்லது. செய்வார்களா? அப்படி நடத்துகிறவர்கள். பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

லாபமா? நஷ்டமா?

“எனக்கு லாபமாயிருந்தவை களெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்’’ (பிலிப்பியர் 3:7).

மனிதர்கள் எப்போதும் வருமானத்தில் மட்டும்தான் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கிறவர்கள் மிகவும் குறைவு.

என்ன செய்தால் லாபம் ஈட்டலாம். எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதுதான் நாள் முழுவதும் மனிதனின் எண்ணங்கள், செயல்கள். ஆனால் இவைகளை எல்லாம் தாண்டி உண்மையான லாபம் மனிதனுக்கு எது என்றால் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதே.

செழித்திருப்பாய்

இந்த ஆண்டு ஜீவ அப்பம் ஊழியங்களுக்கும், சபைக்கும், மாத இதழுக்கும் கர்த்தர் கொடுத்துள்ள ஆசீர்வாதங்களை கொடுத்து உங்களுக்காக ஜெபித்து ஆசீர்வதிக்க விரும்புகிறேன்.

“நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’’ (ஏசாயா 58:11).

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் இந்த ஆண்டிலாகிலும் என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் இருக்காதா ? என்ற எதிர் பார்ப்புடன், ஜெபித்து  நமது வாழ்க்கை பயணத்தை தொடருகிறோம்.

நமது எதிர்பார்ப்பை அறிந்து  நமக்கு  ஆசீர்வாத வாக்குத்தத்ததை  ஆண்டவர் தந்திருக்கிறார். தேவனுடைய கிருபையால் இந்த ஆண்டு செழிப்பின் ஆண்டாக நமக்கு இருக்கப்போகிறது.

வேதாகமத்தில் தண்ணீர் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலே ஆவியானவருடைய வல்லமையால் நிரப்பபட்டு நம்முடைய வாழ்வு செழிப்படையும் என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.

நம்முடைய வாழ்க்கை கர்த்தருடன் அதிகமாக இணைக்கப்பட்டு, தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவாளிகளாக கர்த்தர் நம்மை மாற்றப்போகிறார்.

நீர் வளம் பொருந்திய தோட்டம் எப்படி செழிப்பாக இருக்குமோ, அது போல நம்முடைய வாழ்க்கை கர்த்தருக்குள்ளாக செழிப்படையப் போகிறது.

கடந்த ஆண்டுகளில் காணப்பட்ட வறட்சிகளை நீக்கி,  தடைகளை விலக்கி கர்த்தருடைய கரம் நம்மை நடத்தப்போகிறது. விசுவாசத்துடன் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்ததை சொல்லி தினம் தோறும் ஜெபிக்கும் பொழுது தேவன் இந்த ஆண்டிலே கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்விலே நிறைவேறும்.

ஆவிக்குரிய வாழ்வில் செழிப்பு

“உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்’’ (ஏசாயா 32:15)

நம்முடைய ஆத்துமாவில் இருந்தே செழிப்பு ஆரம்பமாகிறது. எனவே நாம் எந்த அளவுக்கு தேவனோடு ஐக்கியமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்குதான் நம்முடைய ஆத்துமா செழிப்படையும், நம்முடைய ஆத்துமா செழிப்படையும் போதே சமாதானம் உண்டாகும். இல்லை என்றால் ஏதோ ஒரு வெறுமையும், நிர்விசாரமும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பயமும் குழப்பமும் காணப்படும். இவ்விதமாக கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கலாம் ஆனால் இந்த ஆண்டிலே இயேசு கிறிஸ்துவோடு கூட நாம் ஐக்கியமுள்ளவர்களாக இருக்கவும், நம்முடைய ஆத்துமா செழிப்படைந்து தேவனுக்குப் பிரியமாக வாழவும் தேவன்  வாக்குப் பண்ணுகிறார்.

ஆகவே பிரியமானவர்களே, கடந்த நாட்களில், மாதங்களில், ஆண்டுகளில் நடந்தவைகளை நினைத்து கலங்கிக்கொண்டிருக்காமல், தேவன் இந்த ஆண்டிலே என்னுடைய ஆத்துமாவை செழிக்க செய்து என்னில் இருந்து இரட்சிப்பின் தண்ணீர் புறப்பட செய்வார்  என்ற விசுவாசத்துடன் கர்த்தரோடு இன்னும் அதிகமாக நெருங்கி தேவ சித்தம் செய்ய ஒப்புக்கொடுப்போம்.

“வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்’’ (ஏசாயா 35:1)

வனாந்திரமாக இருந்த உங்கள் வாழ்க்கை தொடர்ந்து அப்படியே இருக்க போவது இல்லை. தேவனோடு கொண்டுள்ள உங்கள் ஐக்கியம் பெருகும் போது வனாந்திரத்தைப் போலும் வறண்ட நிலத்தைப் போலும் எதை எடுத்தாலும் தோல்வி, எதைச் செய்தாலும் குழப்பம் என்று இருந்த உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ந்து களி கூறும்படியாக கர்த்தருடைய நன்மைகள் பெருகி, உங்கள் ஆத்துமா செழிப்படையப்போகிறது.

பயத்திலும் திகிலிலும் இருந்த உங்கள் மனம் மகிழ்ந்து உற்சாகமடையப்போகிறது.

தேவனுடைய பிள்ளைகளாக இருந்தும் தேவனோடு சரியான ஐக்கியம் இல்லாமல், மிகவும் வறண்டு போய், ஜெபிக்காமல் இருந்து வந்த உங்கள் வாழ்க்கையை முதலாவது புதுப்பித்து, வற்றாத நீரூற்றைப்போல கர்த்தர் மாற்றப்போகிறார்.

கடந்த ஆண்டில் உங்கள் வாழ்வில் ஆவிக்குரிய செழிப்பு இல்லாமல்  மிகவும் வறட்சியாக காணப்பட்டிருக்கலாம். அதின் நிமித்தமாக குடும்பத்திலும் சமாதானம் இல்லாமல், எப்போதும் பிரச்சனைகள், சண்டைகள் வேண்டாத வாக்கு வாதங்கள், சந்தேகங்கள் என்று நிம்மதி இழந்து வேதனையின் மத்தியில் உங்கள் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால் தேவனாகிய கர்த்தர் இந்த ஆண்டில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வை செழிக்க செய்து, உங்கள் குடும்ப வாழ்வில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்து, ஒரு மனம் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் உண்டாக  செய்யப்போகிறார்.

கர்த்தருடைய சமூகத்தை விட்டு விடாதிருங்கள். தண்ணீர் உள்ள இடங்களில் தன்னுடைய வேரை விடுகிற மரம் எப்படி செழிப்பாக இருக்குமோ, அதே போல தேவனோடு ஐக்கியமாக இருக்கும் உங்கள் ஆவிக்குரிய வாழ்வும் செழிப்பாக இருக்கும்.

தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும் போது எல்லா குறைவுகளும் நிறைவாக மாறும். எந்த விதமான போராட்டங்கள் வந்தாலும் எதையும் எளிதாக வெல்லக்கூடிய பெலன் உடையவர்களாக இருப்பீர்கள். இது  தேவன் இந்த ஆண்டிலே கொடுக்கும் ஆசீர்வாதம்.

எனவே நீங்கள் எதை விட்டாலும் தேவனையும், தேவனுடைய ஐக்கியத்தையும் மட்டும் விடாதிருங்கள். ஏன் என்றால் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் எல்லாவிதமான நன்மைகளையும் கொண்டுவரும். ஆத்துமாவிலே செழிப்பு உண்டாக தேவனுடைய ஐக்கியம் மிக மிக முக்கியம், ஆத்துமாவிலே உண்டாகும் செழிப்புதான் சமாதானத்திற்கு நேராக நம்மை நடத்தும்.

ஆத்துமாவிலே செழிப்பு இல்லை என்றால், சமாதானம் கேள்விக்குறியாக மாறி விடும். எனவே எனக்கன்பான தேவ ஜனமே, இந்த வருடத்திலே கர்த்தர் கொடுக்கும் ஆத்மீக செழிப்பை பெற்று, சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் கர்த்தருக்கு சாட்சியாக வாழ்வோம், தேவ நாமம் மகிமைப்படும்.

தேவனோடு வாழும் வாழ்க்கையில் ஆத்துமா நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.

“ உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்’’ (நீதி 11:25)

செழிப்பான தோட்டம் எப்போதும் மற்றவர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும், அது போல ஆண்டவர் இந்த ஆண்டிலே கொடுக்கும் ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் நாம் பயன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகதான்.

தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்கு, தண்ணீர் பாய்ச்சப்படும் என்று வேத வாக்கியங்கள் கூறுகிறது. எனவே நாம் எப்போதும் கர்த்தருக்குள்ளாக நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

நன்மை செய்வதினாலே ஒரு நாளும் நாம் குறைந்து போவது இல்லை. கர்த்தர் நம்முடைய வாழ்வில் கொடுக்கும் ஆசீர்வாதங்களை நாம் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எந்த ஆத்துமாவையும் நாம் துக்கப்படுத்தக்கூடாது., கர்த்தருடைய வார்த்தையினாலே நாம் ஒருவரை ஒருவர் தேற்ற வேண்டும். கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை செழிக்கச் செய்வதின் நோக்கமே மற்ற ஆத்துமாக்களை கர்த்தரிடமாக கொண்டு வந்து செழிப்படைய வைப்பதேயாகும்.

இந்த கால கட்டத்திலே ஆநேகருடைய ஆத்மீக வாழ்விலே செழிப்பில்லை, ஆத்மீக செழிப்பை குறித்த அறிவு குறைந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே அநேகருடைய ஆத்துமா விடாய்த்த தாக இருக்கிறது.

எதை எதையோ தேடிக்கொண்டிருக்கும் மனிதன் தன்னுடைய ஆத்மீக தேடலை விட்டு விடுகிறான். ஆத்தும மீட்பரான இயேசு கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்து வருகிறான்.

அப்படிப்பட்ட தேவனை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கும் படியாகவே, கர்த்தர் இந்த ஆண்டிலே நமது ஆத்மீக வாழ்விலே மிகுதியான செழிப்பை கட்டளையிடுகிறார்.

ஆகவே இதை ஒரு போதும் நாம் மறந்து விடலாகாது. விலையேறப்பெற்ற நம்முடைய ஆத்துமா இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டது போல, நம்மை சுற்றிலும் இருக்கிற எல்லா மனிதர்களின் ஆத்துமாவும் மீட்கப்பட வேண்டுமே என்ற பாரமும், தாகமும் எப்போதும் நமது இருதயத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதைக்குறித்து தான் உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும் என்று வேதம் திட்டமாக போதிக்கிறது. நம்முடைய ஆத்மீக தேடுதலைப்போல மற்றவர்களும் மீட்பரான இயேசு கிறிஸ்துவை தேட வழி காட்டுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார், இதுவே தேவ சித்தமாக இருக்கிறது.

கர்த்தர் நமக்கு கொடுக்கும் செழிப்பை நாம் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.சுய நலம் நம்மை செழிப்படைய விடாது. இருக்கிற செழிப்பையும் குறைத்து விடும். எனவே எதை செய்தாலும் உதாரத்துவமாக செய்யவேண்டும்.

நம்முடைய வாழ்க்கையும் செயலும் எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பதும், நம்மை செழிப்படைய செய்வதும் அதற்காகத்தான்.

பொருளாதாரத்திலே செழிப்பு

“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’’ (நீதி 10:22)

நாம் வாழ்கின்ற வாழ்க்கை பரலோகத்தை எதிர் நோக்கி இருந்தாலும், இந்த பூமியில் வாழும் காலம் வரைக்கும் பொருளாதாரத்திலும் நமக்கு செழிப்பு அவசியம். பணம், பொருள்கள் மட்டுமே நம்முடைய பிரதானமான நோக்கம் இல்லை. ஆனாலும் நாம் வாழும் வாழ்க்கையில் பொருளாதாரமும் அவசியம் என்பதால் கர்த்தர் நம்மை பொருளாதரத்திலும் உயர்த்துகிற தேவனாக இருக்கிறார்.

இந்த ஆண்டிலே கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்ததின்படி நம்மை பொருளாதாரத்திலும் செழிப்படைய செய்யப்போகிறார். நாம் பொருளாதரத்திலே செழிப்படைந்து நம்முடைய எல்லா தேவைகளும் சந்திக்கப்பட்டு, நாம் குறைவில்லாத வாழ்க்கை வாழும் போது ஒருபோதும் நாம் கர்த்தரை மறக்கலாகாது.

எவ்வளவு செழிப்பு வந்தாலும் நம்முடைய வாழ்க்கை கர்த்தருக்குள்ளாக கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இதைத்தான் கர்த்தர் எப்போதும் நம்மிடத்தில் விரும்பு கிறார். நாம் எப்போதும் தேவ சித்தம் செய்கிற பிள்ளைகளாக இருக்கும் போது கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கும் நாம் சுதந்திரவாளிகளாக இருக்கிறோம்.

எனவே கடந்த ஆண்டிலே காணப்பட்ட நெருக்கத்தை நினைத்து கலங்க வேண்டாம், கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்ததின் படி நமக்கு தந்து நம்மை நடத்திடுவார்.

நீங்கள் செய்கிற வேலையில் ஆசீர்வாதங்களையும், உயர்வையும் காண்பீர்கள். நீங்கள் செய்கிற வியாபாரங்களில் வளர்ச்சியை பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தரைத் துதித்து தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எல்லா வற்றிலும் அவரை முன்பாக வைக்கும்போது கர்த்தர் நம்மை தம்முடைய வல்லமையுள்ள கரங்களால் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

எனவே இந்த ஆண்டிலே கர்த்தர் எல்லா காரியங்களிலும் உங்களை உயிர்ப்பித்து, எவைகள் எல்லாம் தடைகளாக இருந்ததோ அந்த தடைகளை எல்லாம் உடைத்துப்போடப்போகிறார். உங்கள் பொருளாதார உயர்வைத்தடுக்கும்படியாக உங்களுக்கு எதிராக எழும்பின எல்லா சத்துருக்களின் தந்திரங்களை கர்த்தர்  முறிய அடிக்கிறார்.

எதைக்குறித்தும் கலங்காமல், கர்த்தரை துதித்து மகிமைப்படுத்துங்கள். தேவனுடைய கரம் உங்களோடு இருக்கிறது. கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்ததை விசுவாசித்து ஜெபியுங்கள்.

கர்த்தரிடத்தில் இருந்து நன்மைகளை எதிர்பாருங்கள். தேவனோடு இன்னும் அதிகமாக நெருங்கி தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க அர்ப்பணிப்போடு உங்களை தேவனுடைய கரங்களில் கொடுங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செய்யப்போகிறார்.

எத்தனையோ ஆண்டுகள் காத்திருந்த காத்திருப்புக்கு கர்த்தர் இந்த ஆண்டிலே உங்களுக்கு பதிலைக்கொடுக்கிறார். கடந்த ஆண்டுகளில் நீங்கள் கண்ணீரோடு விதைத்த விதைகள், அறுவடையாக உங்களுக்கு முன்பாக வரும்.

சிலர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் போது கர்த்தரோடு நல்ல ஐக்கியமுள்ளவர்களாக, தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, ஆராதனை வேளைகள், ஜெப வேளைகளை விட்டு விடாதபடிக்கு கர்த்தருக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உண்மையாக நேர்மையாக வாழ்ந்து வருவார்கள்.

இப்படி இருக்கும் போது கர்த்தர் ஆத்மீக செழிப்பையும், பொருளாதார செழிப்பையும் கொடுத்து எல்லா வற்றிலும் உயர்வை கொடுப்பார், அதன் பின்பாக கர்த்தரை விட்டு பின் வாங்கி, தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் தோய்வு ஏற்பட்டு, ஏனோ தானோ என்று வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நம்மை பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு கர்த்தர் கொண்டு சென்றாலும் நாம் கர்த்தரை விட்டு விலகாத இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வருடம் அநேகர் பொருளாதாரத்திலும் மிகவும் உயர்ந்த நிலைக்கு செல்லப்போகிறீர்கள்.

இவ்விதமாக கர்த்தர் உயர்த்தும் போது கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக, கர்த்தரை மறக்காத இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

கர்த்தருக்கு உண்மையாக இருக்கும் போது மட்டுமே, ஐசுவரியம் நன்மையாக இருக்கும் இல்லை என்றால் அதுவே வேதனையாக மாறி விடும்.

மக்கள் அநேகர் ஐசுவரிய வான்களாக இருக்கிறார்கள். ஆனால் தேவனுடைய நன்மைகளுக்கு தூரமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தேவ பிள்ளைகளோ, தேவன் கொடுக்கும் ஐசுவரியத்திற்கும், நன்மைகளுக்கும் சுதந்திர வாளிகளாக இருக்க வேண்டுமானால் கர்த்தரை முழு இருதயத்துடன் பின்பற்றுகிறவர்களாக தேவனுடைய வார்த்தைக்கு செவி சாய்த்து, உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற தேவ பிள்ளைகளே, இத்தனை ஆண்டுகாலங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு கர்த்தருக்காக முழுமையாக உங்களை ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செயல்பட விட்டு கொடுங்கள். கர்த்தர் உங்கள் ஆவிக்குரிய வாழ்விலும், பொருளாதரா வாழ்விலும் செழிப்பைக்கொடுத்து எல்லா வற்றிலும் நீங்கள் உயர்ந்திருக்க செய்வார்.