Bread of Life Church India

மனந்திறந்து உங்களுடன்


அன்பு ஜீவ அப்பம் இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 நமது ஜீவ அப்பம் வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில்  ஆவிக்குரிய சத்தியங்களை எழுதவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இணையத்தின் வழியாக தேவனுடைய ஊழியங்கள் செய்து வருகிறோம்,.

தமது கிருபையால் நமது ஜீவ அப்பம் வலைபூவில் தேவனுடைய வார்த்தைகளை தொடர்ந்து எழுத உதவி செய்து, ஆசீர்வாதமாக நடத்திவரும் தேவனைத் துதிக்கிறேன்.
பிரியமானவர்களே, ஜீவ அப்பம் வலைபூவிற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள், உண்மையாகவே கர்த்தர் நமது ஜீவ அப்பம் வலைபூ மூலமாக அற்புதங்களைச் செய்து வருகிறார்.
இதில் வெளியிடப்படும் கர்த்தருடைய வார்த்தைகள் பயனுள்ளதாக இருந்து ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதாக அநேகர் சொல்லுவதைக்கேட்கும் போது மகிழ்ந்து கர்த்தரைத் துதிக்கிறேன்.
கர்த்தர் நோக்கம் இல்லாமல் எந்த ஊழியத்தையும் கொடுப்பது இல்லை. நம்முடைய கரங்களில் கொடுத்திருக்கும் இந்த ஊழியம் மற்ற ஊழியங்கள் போல் இல்லை. ஒவ்வொரு ஊழியமும் கர்த்தரால் கொடுக்கப்படுவதாக இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே நம்முடைய கரங்களில் கர்த்தர் என்ன நோக்கத்திற்காகக் கொடுத்தாரோ, அதை நாம் உணர்ந்து இணைந்து செயல்படுத்துவது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
எல்லோரும் எல்லாவற்றிலும் இணைய முடியாது. யாருடைய உள்ளத்தில் கர்த்தர் இந்தப் பாரத்தை வைக்கிறாரோ, அவர்கள் மட்டுமே இணைய முடியும். அதே வேளையில் இந்த எழுத்து ஊழியத்தில் எல்லோராலும் பங்கு பெற முடியாது. கர்த்தர் யாரை தெரிந்து கொண்டிருக்கிறாரோ, அவர்களால் மட்டுமே பங்கு பெற முடியும்.
இந்தத் தரிசனமும் எண்ணமும் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நிச்சயமாகத் தேவன் விரும்புகிற காரியங்களைச் செய்ய முடியும். நம்முடைய நோக்கமும் திட்டமும் நாமும் கிறிஸ்துவுக்குள் வளரவேண்டும், மற்றவர்களும் கிறிஸ்துவுக்குள் வளர வேண்டும். கிறிஸ்துவுக்குள் வராதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு , கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். இந்த எண்ணத்துடனும் பாரத்துடனுமே தேவனுடைய வார்த்தைகள் எழுதப்படுகிறது.
எழுத்துக்கள் என்றும் வீணாய் போகாது. அதிலும் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய எழுத்துக்கள் ஜீவனுள்ளதாக என்றென்றும் கிரியை செய்யக்கூடியதாக இருக்கும். எப்போது படித்தாலும் அந்த வார்த்தைகள் பலன்கொடுக்கும்.
இதில் எழுதப்படும் வார்த்தைகள் மூலமாகவும்  அநேக சாட்சிகள் உண்டு. ஆகவே படித்துப் பயன்பெற்று இதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் மூலமாகக் கர்த்தர் என்னிடம் பேசினார் என்று அநேகர் சொல்லுவதை கேட்க முடிகிறது. இப்படி அநேக சாட்சிகளைக் கர்த்தர் ஏற்படுத்தி வருகிறார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
எனவே, அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நாம் சந்திக்காதவர்களையும் இந்த வலைபூ சந்தித்துத் தேவனுடைய வார்த்தைகளை அறிவித்து வருகிறது. 
இந்த வலைபூவிற்கு வந்து, வாசித்து உங்கள் உற்சாகமான வார்த்தைகளை தெரிவித்து வருகிறபடியால் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்,
கர்த்தர்தாமே தொடர்ந்து தம்முடைய வார்த்தைகளை கொடுத்து ஆசீர்வதித்து நடத்துவாராக.
உங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

0 comments:

Post a Comment