Bread of Life Church India

சுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்



சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வரும் லூர்துராஜ் என்கிற நான் பிறப்பால் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், சிறு வயதிலிருந்தே இயேசுகிறிஸ்துவை விட புனிதர்களை வணங்கி வழிபட்டதுதான் அதிகமாக இருக்கும் ஏனென்றால் எனக்கு அதைத்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள், எங்கள் ஊரில் உள்ளதும் அந்தோணியார் கோயில்தான்
இவ்விதமாக வளர்ந்த நான் கோவில்பட்டி அருகே உள்ள செவல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவன். 1998 ம் வருடம் ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததினால் திருவொற்றியூரில் உள்ள ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு முதன் முதலாக செல்ல ஆரம்பித்தேன், தொடர்ந்து ஒருவருடகாலம் அந்த சபையின் ஆராதனைகளில் கலந்து கொண்டேன் அந்த நாட்களிலேயே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்


         
அவ்வேளையில் திரும்பவும் ஊருக்குப் போகவேண்டியது ஏற்பட்டதால் அதன் பின்பு ஆறு ஆண்டுகள் சரியான வழிநடத்துதல்  இல்லாமல்,சபைக்கு போகாமல் திரும்பவும் ரோமன் கத்தோலிக்க சபைக்கே சென்று கொண்டிருந்தேன்.
          1995
ல் எனது நண்பர் ஒருவர் மூலமாக அடிக்கடி வேத வசன சத்தியங்களை கேட்டு, எனக்காக சொந்தமாக ஒரு வேதாகமம் வாங்கினேன்.
        
தொடர்ந்து அதை படிக்க ஆரம்பித்தேன்,வாரம் இரண்டு நாட்கள் உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தேன்,கிறிஸ்துவோடு ஐக்கியமுள்ளவனாக இருந்தேன்,ஆனாலும் ரோமன் கத்தோலிக்க சபையிலேயே என்னுடைய ஐக்கியம் தொடர்ந்தது.
       
இவ்விதமாக இருந்து கொண்டிருக்கும்போது 1998 மார்ச் 3ம் தேதி எனது பெரிய அண்ணன் (வயது 31)உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
       
அதுமுதல் நான் விரக்தி அடைந்தவனானேன், இனி வேதாகமத்தை தொடக்கூடாது வாசிக்கக் கூடாது, இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க கூடாது என்று இறுமாப்பாய் முடிவெடுத்து அவ்விதமாகவே தொடர்ந்து இருந்து வந்தேன்.
         
அந்நாட்களில்    சில நேரங்களில் என் உள்ளத்திலே இவ்விதமாக இருப்பது தவறு என்று உணர்த்தப்படுவேன்.ஆனாலும் மனதை கடினப்படுத்தி மறுபடியும் அவ்விதமாகவே நடந்து கொள்வேன்.இவ்விதமாக மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. அவ்வேளையில்தான் என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பம்ஏற்பட்டது.                       
2000ம் ஆண்டு டிசம்பர் 24, கிறிஸ்துமஸ் முந்தின நாள் இரவு, என்னுடைய உள்ளத்துக்குள்ளாக .நீ எனக்கு முன்பாக முழங்கால் படியிட வேண்டும், முழங்கால்கள் யாவும் எனக்கு முன்பாக முடங்க வேண்டும்.என்று ஒரு சத்தம். என் உள்ளத்தின் உணர்வு மூலம் இச்சத்தத்தை கேட்ட நான் மன கடினத்தோடு அதெல்லாம் என்னால் முடியாதுஎன்று பதில் கூறினேன். அப்பொழுதுஎனக்கு முன்பாக முடங்காத உன் கால் உடையும்என்று திரும்பவும் கூறும்பொழுது நான்அதையும் பார்த்து விடலாம்என்று பதில் சொன்னேன். (இதை நான் மறந்து விட்டேன் பின்பு சில நாட்களுக்கு பின்பே இது நினைவுக்கு வந்தது). மறுநாள் கிறிஸ்மஸ் எனது தங்கைக்கு திருமணம் ஆகி முதல் கிறிஸ்மஸ் என்பதால் இரவு குடும்பமாக, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நாடகம் பார்க்க வண்டியில் சென்றோம். நாடகம் பார்த்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் திரும்பி வரும்பொழுது, சென்னை  பீச் ஸ்டேஷன் அருகே நான் வந்த பைக் நின்றுவிட்டது.
      15 நிமிட போராட்டத்திற்குப்பின் பைக் ஸ்டார்ட் ஆனது, இனி எங்கும் வண்டி நின்று விடக்கூடாது என்ற எண்ணத்தில், வெகு வேகமாக வண்டியை செலுத்தி வந்ததில், அதே ரோட்டில் நடுவில் இருந்த பிளாட்பாரத்தை கவனிக்காமல் வந்த வேகத்தில் பிளாட்பாரத்தின் மேல் விட்டதால் பயங்கர விபத்து ஏற்பட்டு, வண்டி ஒருபுறமும் நான் ஒரு புறமுமாக விழுந்து, விழுந்த வேகத்தில் மரித்தேன் என்றுதான் எண்ணினேன். (கர்த்தருடைய கிருபையால்) எழுந்து பார்க்கும்போதுதான் தெரிந்தது வலது கால் தொடைப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு தரையிலே கால் வைக்கவே முடியவில்லை, மேலும் வலது நெற்றிப் பகுதியிலும் வலது கை மணிக்கட்டுப் பகுதியிலும் அடிபட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
      அப்பொழுது கூட இயேசு கிறிஸ்துவை வணங்க வேண்டும், அவருக்கு எதிர்த்து நிற்பது தவறு என்று எண்ணங் கொள்ளாதபடி என் மனம் கடினப்பட்டது. ஆறு மாதமாக பெட்டில் இருந்து தொடர்ந்து சிகிச்சை பண்ணப்பட்டும் எந்தவிதமான முன்னேற்றமும் எனக்கு இல்லாமல் போகவே, சிகிச்சை அளித்தவர்கள்“100 பேரில் ஒருவருக்கு இவ்விதமாக ஏற்படும், எலும்பு சேர்வதற்கான நிணம் இல்லை எனவே கால் எலும்பு இனி சேர்வது கடினமான காரியம்தான்என சொல்லி விட்டார்கள்.


இதைக் கேட்டதிலிருந்து அன்று முழுவதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் மிகவும் அழுதேன். அந்த வேளையில்தான் நான் செய்து வந்த தவறு எனக்குத் தெரிந்தது. மெய்யான தெய்வமாகிய இயேசுகிறிஸ்துவுக்கு எதிர்த்து நின்று, நான் செய்து வந்த முரட்டாட்டமான காரியங்கள் என் நினைவுக்கு வந்தது, அப்பொழுதே அழுது மன்னிப்பு கேட்டு, மனம் திரும்பினேன்.
அவ்வேளையில் வேதாகம வசனத்தின் மூலமாக இயேசு கிறிஸ்து என்னோடு பேசுவதாக உணர்ந்தேன். இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப் போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்து கிறதற்காக உனக்கு தரிசனமானேன்” (அப் 26:16). அன்றிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் நான் படுக்கையை விட்டு எழுந்து நடக்கும்படியாக, சிகிச்சையில் வெற்றியை தந்து அற்புதமாக இயேசுகிறிஸ்து நடத்தினார். அதன்பின்பு கால் உடைந்து சிகிச்சை பெற்றதுக்குண்டான எந்த அறிகுறியும் தெரியாத வண்ணமாக சுகத்தோடு நடக்க செய்தார்.
அதிலிருந்து தொடர்ந்து உள்ளத்துக்குள்ளாக இயேசு கிறிஸ்துவை அதிகமாக நேசித்து, அவரை சேவிக்க ஆரம்பித்தேன். ஆனாலும், சபை ஐக்கியமோ, மாறவில்லை இவ்விதமான சூழ்நிலையில் குடும்பத்தில், எனக்கு சிகிச்சை செய்ததின் நிமித்தமும், (சென்னை திருவொற்றியூரில் எங்களுக்கு சொந்தமாக மூன்று மளிகை கடை இருந்தது) தொழில் நஷ்டத்தின் நிமித்தமும் கடன் பாரங்கள் அதிகமாயின ஒரு சமயத்தில் (2003ம் வருடம்). மூன்று கடைகளையும் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு,  இனி ஒவ்வொரு நாளும் என்ன செய்வது என்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
அவ்வேளையில்தான் பெந்தெகொஸ்தே அனுபவத்தில், ரோமன் கத்தோலிக்க சபைக்குள் இருந்து ஊழியம் செய்து வந்த சகோதரர் மூலமாக, ஒரு நல்ல ஜெப ஐக்கியத்தையும், வழி நடத்துதலையும் தேவன் தந்தார்.
அந்நாட்களிலிருந்து இனி நமது வாழ்வில் இயேசுகிறிஸ்துவை தவிர வேறு ஒருவருக்கும் இடமில்லை என்பதை வைராக்கியத்தோடு தீர்மானித்து குடும்பத்தில் காணப்பட்ட வாழ்வா? சாவா? போராட்டத்தில், தேவ சமூகத்தில் கொடுத்துவிட்டு தேவன் நடத்துகிற வழியிலேயே இனி செல்ல வேண்டும் என்கிற முடிவோடு என்னை தேவ சமூகத்தில் தேவ சித்தத்துக்கு அர்பணித்தேன்.
அப்பொழுதிலிருந்தே ஊழியத்திற்காக தேவன் என் உள் உணர்வு மூலமாக அடிக்கடி அழைத்த அழைப்பை மனதில் நிருத்தியே செயல்பட ஆரம்பித்தேன். ஆனால் ஊழியம் என்ன என்பது தெரியாது, ஆனால் தேவன் ஒவ்வொரு பகுதியிலும் அற்புதமாக செயல்பட்டார், நடத்தினார்.
அவ்வேளையிலே ஒரு பெந்தகொஸ்தே சபையின் ஐக்கியமாக இருந்தால் நலமாக இருக்குமே என்று எண்ணின போது ஒரு சகோதரர் மூலமாக பெரியார் நகர் பகுதியில் இருக்கும் ஒரு சபையில் தேவன் ஐக்கியப் படுத்தினார் அந்த நாட்களிலே, இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால் நிறப்பப்பட்டு, அவருடைய இரட்சிப்பையும், பெற்று,  இன்னும் அதிகமான வேத ஞானத்தையும், ஊழிய அனுபவங்களையும் தேவன் கற்றுக் கொடுத்தார். பகுதி நேரமாக வேலை செய்து கொண்டே சபையின் எல்லா ஊழியங்களிலும் பங்குபெறவும், வேதாகம கல்லூரியில் பயிலவும், தேவன் கிருபையாக நடத்தினார்.
அதிலிருந்து எங்கள் குடும்ப கடன் பாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்படியாக தேவன் எங்களை ஆசீர்வதித்து ஒன்றுமில்லா நிலைக்கு வந்துவிட்ட எங்கள் வாழ்வில் வசந்தத்தை வீச செய்து அற்புதமாக தேவன் நடத்த ஆரம்பித்தார்.

சுவடுகள் தொடரும்.

0 comments:

Post a Comment