Bread of Life Church India

மொழி பிரிந்த வரலாறு



காடுகள் மலைகள் என எங்கும் சிதறிச் சென்று, அவற்றைக் குடியிருப்புக்களாக மாற்றி, புதிய பூமியில் மனிதர்கள் பரவ ஆரம்பித்தனர். மனிதர்களின் எண்ணிக்கை பூமியில் பெருகப் பெருக பட்டணங்களைக் கட்டுவதிலும், தங்கள் குடியிருப்புக்களை கவனிப்பதிலும் அதிக கவனத்தைச் செலுத்தியதால், மக்களுக்கு கடவுளைக் குறித்த எண்ணங்கள் குறைய ஆரம்பித்தன.
நோவாவின் இரண்டாம் மகன் சேமுடைய வழி மரபில் வந்த ஏபேர் என்பவனுக்கு  இரு புதல்வர் பிறந்தனர்; அவர்களில்  ஒருவனுக்கு  பேலேகு என்று பெயர் வைத்தான்.  ன் என்றால் அவன் பிறந்த காலத்தில்தான் மக்கள் தேசம் வாரியாக பிரிந்தனர். தேசங்களுக்குள் எல்லைகள் அமைக்கப்பட்டு, ராஜ்யங்கள் உண்டாயின.

அதுவரை எல்லா மக்களுக்குள்ளும் ஒரே விதமான மொழியும், ஒரேவிதமான பேச்சுக்களும் இருந்து வந்தன. மக்கள் எல்லோரும் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்து தேசம்வாரியாக பிரிவதைக்கண்ட சிலர்,நாம் யாவரும் சிதறி செல்லாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். நாம் நாடுகளாக பிரிந்து செல்லக்கூடாது. நாம் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதற்காக நாம் யாவரும் இணைந்து எதாவது செய்ய வேண்டும்’’ என்று பேசிக்கொண்டனர்.
                சிலருக்கு அதில் உடன்பாடு ஏற்பட்டு சரி என்று தலை அசைத்தாலும்,அது எப்படி எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க முடியும். நாம் தங்குவதற்கென்று இட வசதி இல்லாததினால்தானே அவரவர் ஆங்காங்கே பிரிந்து செல்லுகிறோம்’’ என்று பேசிக்கொண்டிருக்கும் போதே இன்னும் அநேகர் கூட்டமாக கூடி விட்டனர்.
அதற்கு நாம் எல்லோரும் இணைந்து ஆலோசனை செய்தால் அதற்கு கட்டாயம் ஒரு வழி பிறக்கும். நாம் எல்லோரும் ஒன்று பட்டால் அது நடக்கும் என்ன சொல்லுகிறீர்கள்?’’ என்று ஒருவன் உரத்த சத்தமாக கேட்க, கூடி இருந்த எல்லோரும்அதற்கு வழி இருக்குமானால் நாம் அதை ஆலோசித்து முடிவு செய்யலாம். இன்னும் மற்றவர்களும் இந்த தகவலை அனுப்பி எல்லோரும் கூடிவரலாம்’’ என்று சொல்ல எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.
எல்லோரும் ஒன்றாக கூடிவரவேண்டும் என்று எல்லா மக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. மாலை வேளையில் ஆங்காங்கே சிதறி இருந்த எல்லா மக்களும்   ஒன்றாக கூடிவர,  ஆலோசனை செய்ய திரள் கூட்டமாக எல்லோரும் கூடி இருந்தனர்.
எல்லோரும் கூடி வந்த பின் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து ஒருவன்ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளவா நாம் எல்லாரும் கூடி இருக்கிறோம்? என்ன செய்யலாம் என்று சொல்லுங்கப்பா’’ என்று கூட்டத்தை பார்த்து கேட்டான்.
கூட்டத்தின் சல சலப்புக்கள் மத்தியில் ஒருவன் எழுந்து நின்றான். அவன் என்ன சொல்லப்போகிறான் என்று எல்லா கண்களும் அவனையே நோக்கி இருந்தன. அவன் பேச துவங்கியதும் சல சலப்பு அடங்கி அமைதி நிலவியது. “நான் சொல்லுவதை எல்லோரும் கவனமாகக் கேளுங்கள், இப்படியே நாம் அங்காங்கே சிதறி செல்லாதபடிக்கு ஒரே இடத்தில் வானம் தொடும் அளவுக்கு மிகப்பெரிய கோபுரத்தை அமைத்து, நாம் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி இருக்கலாம், நீங்கள் எல்லோரும் என்ன சொல்லுகிறீர்கள்’’ என்று கேட்டு விட்டு மற்றவர்கள் பதிலுக்காக காத்திருந்தான்.
சிறிது நேரம் மௌனமாக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தனர்.  இன்னொருவன் கூட்டத்தில் இருந்து எழுந்து நாம் எல்லோரும் ஒரே நகரமாய், ஒரே இடத்தில் இருப்பது சாத்தியமா? அதற்காக ஒரே இடத்தில் நாம் எப்படி கோபுரமாக கட்டமுடியும், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை’’ என்று சொல்லி விட்டு, தன்னுடைய பேச்சை  மற்றவர்கள் எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்கள் என்று பார்க்க எல்லோருடைய முகத்தையும் பார்த்தான்.
ஆனால் ஒருவரும் அவனுடைய பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் தெரியாததால் அமைதியாக இருந்து விட்டான்.
சிறிது நேரம் அமைதியான சூழல் ஏற்பட்டது, அந்த அமைதியை கலைக்கும் விதத்தில் கூட்டத்தில் இருந்து மற்றவர்களும் பேச ஆரம்பித்தனர். “நாம் எல்லோரும் ஒன்று கூடினால் கட்டாயம் ஒரே இடத்தில் வான உயரத்திற்கு ஒரே கோபுரமாக கட்டமுடியும் என்றால் அதற்கு  என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதன்படி எல்லோரும் இணைந்து செயல்படலாம்’’ என்று ஒரே குரலில் பேசினர்.

முதலாவது பேசியவன் முகத்தில் புன்னகையுடன் “நாம் மட்டும் ஒன்றாக வானம் வரை ஒரே கோபுரம் கட்டி விட்டால்  அதனால் நமக்கு பெயர் உண்டாக்குவோம். அதற்காக எல்லோரும் இணைந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அதற்கு தேவையான செங்கற்களை அறுத்து சுட வேண்டும், கற்களுக்கிடையில் கீலை வைத்து, காரையாகக் கட்டி எழுப்பினால் நாம் நினைத்தது போல எல்லாவற்றையும் செய்து முடித்து விடலாம், அதற்குண்டான ஆலோசனைகளை நான் சொல்லுகிறேன். அதன்படி எல்லோரும் செயல்பட்டால் நம்முடைய முயற்சி எளிதாக இருக்கும்’’ என்று சொன்னபோது அவனது பேச்சிற்கு எல்லோரும்அப்படியே செய்வோம்’’ என்று ஒரே முழக்கமிட்டனர்.
      ஒரு சிலர் மட்டும், “நாம் எல்லோரும் பரந்து விரிந்து பூமியை நிறைத்து வாழ வேண்டும் என்றுதான் நம்மை படைத்த கடவுள்  சொல்லி இருக்கிறார். அவருடைய விருப்பத்திற்கு மாறாக இப்படிப்பட்ட வேலையில் ஈடுபடுவது, கடவுளுக்கு எதிரான செயலாக இருக்கும். ஆகவே நாங்கள் இதில் பங்கு பெறமாட்டோம்" என்றனர்.

      பிரிந்து செல்லுகிறவர்களைப் பார்த்து மற்றவர்கள் “
நாமெல்லாரும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்பது தவறா?  நீங்கள் ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள். பூமி எங்கும் பரவினால் என்ன, வானம் வரை உயர்ந்தால் என்ன? ‘  நீங்களும் எங்களோடு இணைந்து இருங்கள்’’   என்று சொல்ல,  “இல்லை, நீங்கள் செய்ய நினைத்திருப்பது கடவுளுக்கு விருப்பமில்லாத செயல், அதில் நாங்கள் பங்கு பெற முடியாது. கடவுளின் விருப்பமே எங்கள் விருப்பம் என்று சொல்லி  விலகிச் சென்றனர்.  
அப்பொழுது அவர்கள், “நீங்கள் கொஞ்சமானவர்கள்.  நாங்கள் அதிகமாக இருக்கிறோம்.  நீங்கள் பிரிந்து செல்லுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் நினைத்ததை செய்து முடிப்போம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது’’ என்று சொல்லி மற்றவர்களைப் பார்த்து, " நாம் யாவரும் ஒன்றாகவே இருப்போம், இணைந்து செயல்படுவோம்" என்று  சொல்லி, ஒருவரை ஒருவர் நோக்கி, "வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம். அவற்றை வைத்து உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்". செங்கல்லைக் கல்லாகவும், கீலைக் காரையாகவும் பயன்படுத்தினால் நாம் நினைத்தது போன்று ஒரே இடத்தில் நாம் இருப்பதற்கு வசதியாக கோபுரத்தை போன்றதொரு நகரத்தை  அமைத்து விடலாம் என்று சொல்ல, எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதிக்க கோபுரம் கட்டும் பணி துவங்க ஆரம்பித்தது.  
நீங்கள் பூமி எங்கும் சென்று பரவி பூமியை நிரப்புங்கள்’’ என்ற கடவுளின் வார்த்தைக்கு எதிராக நமது செயல்பாடுகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் மனநிலையில் ஒருவரும் இல்லை. எல்லா மக்களும் ஒன்றாக வேலையில் ஈடுபட்டதினால், கோபுரத்தின் வேலைகள் வேகமாக நடைபெற ஆரம்பித்தன.
அப்பொழுது தமது விருப்பத்திற்கு மாறாக மனிதர்கள் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் வானம் வரை ஒரே நகரமாக  கோபுரம் கட்ட முடிவு செய்து, வேலை செய்து கொண்டிருப்பதைக் காண கடவுள் கீழே இறங்கி வந்தார்.
அப்பொழுது ஆண்டவர், "இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். ஆகையால் தாங்கள் செய்ய நினைத்த வேலைகள் தடைபடாது என்று நினைத்து அவர்களின் விருப்பத்தின் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது  என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாம் அவர்களில் ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்"  என்று சொல்லி அவர்களுக்குள்ளாக இருந்த ஒரே மொழியை கடவுள் பிரித்தார்.
அவர்களுக்குள் மொழி பிரிந்ததால் ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாமல், “செங்கல் எடுத்துக்கொண்டு வா ‘ என்றால் மண் எடுத்துக்கொண்டு கொடுத்தனர், “தண்ணீர் எடுத்துக்கொண்டு வா’’ என்றால் செங்கல் எடுத்துக் கொடுத்தனர். இப்படியாக ஒருவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியாமல் குழப்பம் அடைய ஆரம்பித்தனர். தாங்கள் பேசுவது என்ன என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் பேச்சு மொழி அவர்களுக்குள்ளாகப் பிரிந்தன. இப்படியாக ஒன்றைக்கேட்டால் இன்னொன்றை எடுத்துக்கொடுக்க  கோபுரம் கட்டும் வேலைகள் தடைபட ஆரம்பித்தன.
பூமி முழுவதும் சிதறி வாழ்வதே மக்களுக்கு நலனைக் கொண்டுவரும் என்று கடவுள்  தமது விருப்பத்தின்படி  அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் கோபுரத்தைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
ஆகவே அந்தக் கோபுரத்திற்கு தாறுமாறு என்று அர்த்தம் தரும். "பாபேல்" என்ற பெயர் வழங்கப்பட்டது. அதுவரை ஒரே மொழியாகவும், ஒரே பேச்சாகவும் இருந்ததை கடவுள்  பிரித்து பல மொழிகள் உண்டாக்கியதால் மக்கள் மொழி வாரியாக பிரிந்து சென்று உலகமெங்கும் பரவ ஆரம்பித்தனர்


ஆதியாகமம்  11 ம் அதிகாரம் 9 ம் வசனம் வரை கதைவடிவில்.....








வேதாகம சரித்திர கதைகளின் முந்தைய Links



பகுதி 1 

காணும் போதே மறைந்த தோட்டம்    

 

பகுதி 2

மனு குலத்தின் முதற்கொலை 

 

பகுதி 3 

மரணத்தை காணாத மனிதன் 

 

பகுதி 4 

பூமி முழுவதும் அழியப் போகிறது

 

 பகுதி 5

உலகின் முதல் ஆழிப்பேரலை

 

 

பகுதி   6

 

புத்தம் புதிய பூமி

 

  பகுதி  7

புதிய பூமியில் புது துவக்கம்

 

0 comments:

Post a Comment