Bread of Life Church India

Jeeva Appam Magazine (ஜீவ அப்பம் மாத இதழ் ) September 2013 pdf

பிரியமானவர்களே, இம்மாத (செப்டம்பர்) "ஜீவ அப்பம் மாத இதழை, தறவிறக்கம் செய்து வாசித்து, தேவ ஆசீர்வாதம் பெற்று மகிழுங்கள்.

கீழே pdf file, Download link கொடுக்கப்பட்டுள்ளது.


ஜெபத்துடன், எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள். பயனுள்ளதாக, ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்

வாசித்து பயன்பெற்று , நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை, தெரியப்படுத்துங்கள். ஒன்று சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துவோம்.


Download link

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான என் அன்பு சகோதர சகோதரிகளே, சமாதானம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு கர்த்தர்  கொடுக்கும் வாக்குத்தத்தமான தேவனுடைய வார்த்தை ``சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்'' <பிலி 4:9>.
                சமாதானம் என்றால் எபிரேய மொழியில் ``ஷாலோம்'' என்றும் கிரேக்கத்தில் ஐரீன் என்றும் அழைக்கப்படும் இவ் வார்த்தையானது வாழ்க்கையை சிக்கலில்லாமல் மனதை தூய்மையாய் காத்து உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்தல் என்று அர்த்தம் தருகிறது.

உங்களோடு ஒரு நிமிடம்

தேவனுடைய இராஜ்ஜியத்தில் நாம் பங்கு பெறும் படிக்கு  நமக்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி, நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
     தொடர்ந்து  ``நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிடும்படியாக கிருபை கொடுத்து தாங்கி நடத்திவரும் தேவாதி தேவனைத் துதிக்கிறேன்.
    கடந்த மாதத்தில் ஜீவ அப்பம் மாத இதழ்  ஆசீர்வாதமாக இருந்தது என்று அநேகர் தொலைபேசி வழியாக தெரிவித்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
    தற்போது அநேக இடங்களுக்கு மாத இதழ் அனுப்பி வைக்கப்படுவதால்,  அநேகர் தொடர்பு கொண்டு, ஜீவ அப்பம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது, தொடர்ந்து எங்களுக்கும் அனுப்பி தாருங்கள் என்று தங்கள் விலாசத்தை கொடுத்திருக்கிறார்கள்.
    பிரியமானவர்களே, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் ஏராளம். அவைகளை அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக நாம் செயல்படவேண்டியது அவசியம்.
     இன்னும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இருப்பதால்,  இதற்கு தேவைகள் அதிகமாகிறது.
    ஒவ்வோரு மாதமும் புத்தகம் வெளியிடுவது சாதாரணமான காரியம் அல்ல, ஒவ்வோரு இதழும் சவாலாகத் தான் வெளியிடப்படுகிறது, தேவனுடைய கிருபையும், தேவனுடைய துணையும் இல்லாமல் இருக்குமானால் கட்டாயமாக இப்புத்தகம் வெளியிட முடியாது எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
    இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் முதல் எல்லாமாதமும். தொடர்ச்சியாக ஜீவ அப்பம் வெளியிட தேவன் கிருபை செய்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  இதற்கு தேவ பிள்ளைகளாகிய உங்களின் ஜெபமும், நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
    தொடர்ந்து உங்களின் ஜெபமும் ஒத்துழைப்பும் தேவை, கர்த்தரை மட்டுமே சார்ந்து, விசுவாசத்துடன் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது. நீங்கள் இந்த ஊழியத்தில் பங்கு எடுத்து செயல் படும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். எல்லா வித நன்மைகளையும் பெற்று நீங்கள் சுகத்துடன் வாழ்வீர்கள்.
    இந்த ஊழியத்துடன் இணைந்து செயல்படும் போது, நீங்களும் ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஊழியத்தின் மூலமாகவும், நமது ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும் போது அந்த ஆசீர்வாதத்தின் பலனை கர்த்தர் உங்கள் கணக்கில் கொண்டு வருவார்.
    புத்தக ஊழியம் ஒரு மிஷனரியாக செயல்படக்கூடியது. எப்படி என்றால் நாம் நேரடியாக சென்று சொல்ல முடியாத இடங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் எழுதி அனுப்ப முடியும். நாம் போக முடியாத இடங்களுக்கும் வீடுகளுக்கும் இப்புத்தகம் சென்று,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்து,தேவனுடைய வார்த்தையை சொல்லி, இயேசு கிறிஸ்துவை அறிந்திராத அநேகரை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறது.
    உலகத்தின் நெருக்கத்தால் சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சோர்ந்து இருக்கும் தேவ பிள்ளைகளை உற்சாகப் படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க தேவனுடைய வார்த்தையால் பெலப்படுத்துகிறது. நமது ஜீவ அப்பம் மாத இதழ் ஒரு மிஷனரியாக செயல்படுகிறது. எனவே ஜீவ அப்பம் மாத இதழ் என்னும் மிஷனரியை தாங்குங்கள்.
    அன்பானவர்களே இந்த ஊழியத்தில் இதுவரை நீங்கள் பங்கு எடுக்காமல் இருந்தால் உடனடியாக பங்கு எடுக்க முன் வாருங்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவதை நீங்கள் காண்பீர்கள்.
    தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவாதி தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தினால் நிறைத்து, ஒரு குறைவும் இல்லாமல் நல்ல சுகத்துடனும் பெலத்துடனும், சந்தோஷமாக வாழ கிருபை தருவாராக ஆமேன். 

ஆபத்து வரும் முன்......

 மது அருந்தி அதில் இன்பம் காண துடிக்கிறது சிலருடைய இருதயம். அந்த மதுவினால் ஏற்படும் துன்பத்தின் மிகுதி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளாமல். அதை தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்தும், பெருமையாக நினைத்தும் வாழ்கிறவர்களை காண முடிகிறது. ஆபத்து வரும் வரை ஆபத்தின் விளைவுகளை அறியாமல் வாழ்கிறவர்கள் இப்படி மதுவுக்கு அடிமையானவர்களே.

மதுவுக்கு அடிமையானவர்களிடத்தில் என்னதான் அறிவுரை சொன்னாலும் கேட்கும் மன நிலையில் அவர்கள் இருப்பதில்லை. மதுவினால் பிடிக்கப்பட்டு, நடத்தப்பட்டவர்களை கணக்கிட்டு அவர்கள் வாழ்நாளை அறிந்தால் ஐம்பது வயதை கடந்தவர்கள் சிலர் மட்டுமே, இப்படிப்பட்ட மதுவுக்கு அடிமைப்பட்டு, விடுபட முடியாமல், குடும்பத்தை கவனிக்காமல், பிள்ளைகளை சரியாக வளர்க்காமல், வாழ்க்கையையே இழந்தோர் எண்ணிக்கைக்குள் அடங்காதோர். 

சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு வாலிப சகோதரன் வயது 22.மது என்ற போதைக்கு அடிமையாகி, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் வருவதை கவனிக்காமல் ரயிலில் அடிபட்டு, ஒருகால், ஒரு கை முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருக்கு ஆபத்து இல்லாமல், தற்போது ஒரு கால், கை இல்லாமல்  மிகுந்த வருத்தம் அடைகிறார். அதற்கு முன்பு சொல்லப்பட்ட அறிவுரையெல்லாம் அவருக்கு எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது,  ஆனால் அறிவுரைகளை தள்ளியதால் ஏற்பட்ட விளைவுகள் வாழ்க்கை முழுவதும் வேதனை. இப்படிப்பட்டோர் ஒருவர் இருவர் அல்ல, எண்ணிக்கைக்கு அடங்காதோர்.

குடி, போதை , இன்பமாகவும், கொண்டாட்டமாகவும் ஆரம்பிக்கப்படுகிறது, ஆனால் அது துன்பமாகவும், வேதனையாகவும் முடிகிறது. மதிமயக்கும் அந்த மதுவை அருகில் வரவிடாமல் துரத்தி அடித்து விட்டால் வாழ்க்கையில் எப்போதுமே இன்பம்தான். இந்த மதுவை ஊக்குவித்தும், மது அருந்தும் போது, துணைதேடியும், மது என்றால் இலவசமாக கூட வாங்கி தருகிறேன் என்றும் இருப்பவர்களை காணலாம், உலகமோ, அரசாங்கமோ, நண்பர்களோ மதுவை அருந்த அனுமதிக்கலாம். ஆனால் அந்த மது வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீக்கிரத்தில் அழித்துவிடும். 

அடிமைப்பட்டவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாது ஏனென்றால் பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு   அடிமையாக இருக்கிறான் அது அவனை விடாது. ஆகவே, இந்த அடிமைத்தனத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் முழுமையான விடுதலையை பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளை அறிந்து கொண்டால் அந்த வார்த்தைகள் விடுதலையோடு வாழவைக்கும். ( யோவான் 8:32,34,36.)

எனது தலைவன்

    ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தான் பின்பற்றக் கூடிய மாதிரியாக ஒரு தலைவரை தெரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பதுண்டு.
         அப்படி ஒருவர் பின்பற்றக் கூடிய தலைவர், எப்படிப்பட்டவர்? என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
ஏனென்றால் தான் பின்பற்றுகிறதலைவர்
(1)    நம்மில் ஒருவராக
(2)    நம்மில் மேலானவராக
(3)    நமக்கு முன்மாதிரியாக
(4)    நாம் நினைப்பதை அப்படியே செய்பவராக

இருக்க வேண்டும் என்று எல்லோருமே நினைப்பது உண்டு.

    ஆனால் இவையாவும் ஒன்றுசேர ஒருவருக்குள் அமைவதென்பது கூடாத காரியம். மாறாக ஒருசில தன்மையோடு மட்டுமே சில தலைவர் இருப்பதுண்டு.

    மேலும், தனக்கு முன்மாதிரியாக வைக்கும் தலைவர் சில நேரங்களில் ஏதோ ஒன்றில் தவறு செய்ய நேரிடும் பொழுது முழு மனதோடு ஏற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு நபரும் விரும்புவதில்லை.

    ஏனென்றால், தவறு செய்யும் தலைவரின் தனித் தன்மை மற்றவர்களைப் போல சாதாரண நிலைக்குத் தள்ளப்படுகிறது.

    இது ஆன்மீகம், அரசியல், மற்றும் பொழுதுபோக்கு துறைகளானாலும் சரி மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் சிலர் அன்பின் மிகுதியில் தான் பின்பற்றுகிறவரை தலைவர் தன்மையுடன் காணலாம்.

    ஆனால் உலகமும் சரித்திரமும், அதை ஒப்புக் கொள்வதில்லை.

    ஆகவே, எந்த சூழ்நிலையிலும் சாதாரண நிலையிலல்ல இன்னொருவர் பின்பற்றக் கூடிய தலைவருக்குரிய தகுதிகளுடன் (தவறு செய்யாத) இருப்பதையே எல்லோரும், ஏன் சரித்திரமும் கூட எதிர்பார்க்கிறது.

    அப்படிப்பட்ட ஒருவரே தலைவர் என்றஇடத்திற்கு சரியானவராக இருக்க முடியும். இப்பொழுது எல்லோரு க்குள்ளும் எழும் கேள்வி, தவறே செய்யாத தலைவர் உண்டா? அவர் யார்? இதற்கு சத்தியமும் சரித்திரமும் ஒருவரை அடையாளம் காட்டுகிறது. அவர் யார்? எப்படிப்பட்டவர்?

     எதைப் பற்றியும், கவலைப்படாதவர்; எதற்கும் அஞ்சாதவர்; அநீதி அக்கிரமங்களை கண்டிக்கத் தயங்காதவர். மக்களின் விடுதலைக்காக துணிச்சலோடு போராடினவர். தன்னலமற்றவர்; பிறரை நேசித்தவர்; தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்பவர்,என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? என்று சவால் விட்டவர் (யோவான் 8:46). ``என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; என் பின்னே வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; என்று நல்வாழ்வுக்கு அழைக்கும் இயேசு கிறிஸ்துவானவரே.

1)  நம்மில் ஒருவராக

     நம்மில் ஒருவராக தன்னுடைய சிங்காசனத்தை விட்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் (லூக் 2:11), மனுஷர் தயவில் வளர்ந்தவர் (லூக் 2:52). மேலும் வேதம் கூறுகிறது. ``நம்முடைய பலவீனங்களைக்'' குறித்து (தோல்விகள்) பரிதபிக்கக் கூடாத (புரிந்து கொள்ள முடியாத) பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவற்றிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டு (நம்மில் ஒருவராக) பாவமில்லாத வராயிருக்கிற (குற்றமே செய்யாத) பிரதான ஆசாரியரே (தலைவரே) நமக்கிருக்கிறார் (எபி 4:15).

     இதிலே சொல்லப்பட்டிருக்கிறநம்மைப் போல என்று சொல்லும் வார்த்தை நமக்குள் ஒருவராய் இருக்கிறார் என்று பொருள்படும்படி எழுதப்பட்டுள்ளது. அவரே நமது பிரதான ஆசாரியர் என்று சொல்லும் வார்த்தை முதல் தலைவர் என்று நமக்கு வெளிப்படுத்துவதை காண முடிகிறது.

     இது நம்மில் ஒருவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறஎண்ணத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது.

2) நம்மிலும் மேலானவர்

    எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, ``அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். (எபே 1:20_23) என்று வேதம் நமக்கு தெளிவுபடுத்திக் கூறுகிறது.

    எனவே உன்னதங்கள் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக என்பதை நமக்கு உணர்த்தி கொடுக்கிறது.

    சரீரமான சபை என்பது ஒரு இடத்தையல்ல; திரளான மக்கள் கூட்டத்திற்கு (தலையாக) தலைவராக ஏற்படுத்தினார் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

    எனவே நாம் பின்பற்றுகிறவர் நம்மிலும் மேலான வராக இருப்பதை நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராகவும் உள்ளார்.

3) நமக்கு முன்மாதிரியாக

    அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.

    அவர் மனுஷ ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார் <பிலி 2:6_9> என்று வேதம் கூறுகிறது.

    அவர் எல்லாவற்றிற்கும் தலைவராயிருந்தும் அதை அவர் உயர்வாக எண்ணாமல், தம்மைத் தாழ்த்தி என்று சொல்வது நம்மைப் போல் மாற்றப்பட்டு, பாடுகளின் வழியாக இந்த உயர்வை பெற்றார் என்று மிகவும் அழகாக இந்தப் பகுதி நமக்கு விளக்கி கொடுக்கிறது.

    இதே வழியிலேயே தன் சீஷனும் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

    ``ஒருவன் என்னைப் பின் பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்'' (மத் 16:24). இது அவரே தம்மைப் பின்பற்றவிரும்புகிறவர்களுக்கு கொடுத்துள்ள ஒரு அறைகூவல் ``ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார் (1 பேதுரு 2:21) என்று வேதம் கூறுகிறது.

    தன்னைப் பின்பற்றி வர வேண்டுமென்று வார்த்தை அளவிலே நின்று விடாதபடிக்கு, அவைகளை செயலில் நிரூபித்து, மாதிரியை உண்டு பண்ணி கொடுத்திருக்கிறார். ஆகவே அந்தப் பாதையில் செல்வது அவர் பெற்றவெற்றியை பெற்றுக் கொள்வதற்காகத்தான். அவர் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

4) நாம் நினைப்பதை செய்கிறார்

     நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்கு செய்ய வல்லவராகிய அவருக்கு (எபே 3:20) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் நாம் நினைப்பது மாத்திரமல்ல அதற்கும் மேலே அவரால் செய்ய முடியும் என்பதே வேதத்தின் பதில். இது நமக்கு மாத்திரமல்ல காலங்கடந்து, செய்துகொண்டு வருகிறவருக்கு சரித்திரமும் சாட்சி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

    ``பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று அவர் நமக்காக ஜெபித்த பொழுது. அவர்

1)    சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார்.
2)    தன்னுடைய சரீரத்தில் மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையிலிருந்தார்.
3)    பாடுகளின் உச்சத்தில் இருந்தார்.
4)    தன்னுடைய ஆத்துமாவிலும், சரீரத்திலும் மிகுந்த வேதனைக்குள்ளான நிலையில் இருந்தார்.

    ஆனால் தான் செய்து முடிக்க வேண்டியதில் மிகவும் தெளிவுள்ளவராய் இருந்தார். தான் வந்த, ஏற்றுக் கொண்ட பணியை மிகவும் சரியாக செய்து, இன்று உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பாவமன்னிப்பைப் பெற்று, நித்திய மரணம், நித்திய அழிவு ஆகியவற்றின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கப் பட்டிருக்கிறார்கள்.

    வேதம் கூறும்பொழுது ``நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன் (ரோமர் 7:15), நிர்பந்தமான மனுஷன் நான்; இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:24) என்றமனிதனின் ஏக்கங்கள் தவிப்புகள், மனிதனின் விருப்பங்கள், இவைகளை நிறைவேற்றுகிறவராக ``கிறிஸ்து இயேசுவினாலே_ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோமர் 8:2), ஆகவே நம்முடைய மனதில் நினைப்பதை நமக்காக செய்கிறவராக இருப்பவர், இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பானவர் யார்?

    அப்படியானால், நான் பின்பற்றவிரும்பும் தலைவர் : சந்தேகமே இல்லை இயேசுவே!

பின் வாங்குதல் சர்வ சாதாரணமாக இருக்கிறதே ஏன்?

     பின் வாங்குதல் என்பது ஒரே நாளில் நடந்து விடக்கூடிய ஒன்றல்ல! காரணம் விசுவாச வாழ்க்கைக்குள் வந்துவிட்ட விசுவாசி, விசுவாச வாழ்வைத் துவங்க ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் கிறிஸ்துவைத் தவிர வேறு ஒன்றையுமே நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.
  
அப்பொழுது மற்ற உலக விஷயங்கள் எல்லாம் அற்பமாகத் தோன்றும், விசுவாச வாழ்விலே நல்ல நிலையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.
இப்படியே தங்கள் இலக்கை நோக்கிப் போகிறவர்களும் உண்டு, இப்படிப்பட்டவர்கள் வேதாகம முறைமைகளுக்கு உட்பட்டு, கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் தாம் போகும் பாதை சரியானதே, இதில் தவறு ஒன்றும் இல்லை என்று மனத்தெளிவோடு, விழிப்போடு விசுவாசத்தில் உறுதிபட்டவர்களாய், எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
தேவனும் உதவி செய்து அவர்கள் விசுவாசத்தை மென்மேலும் வர்த்திக்கச் செய்து உயர்வைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆனால் சிலர் கிறிஸ்துவுக்குள் நன்றாக விசுவாச வாழ்வை துவக்கியிருந்தாலும், கிறிஸ்துவை அறியாத விசுவாச வாழ்வுக்குள் வராமல் இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்து, ``நான் மட்டும் ஏன் விசுவாச வாழ்விலே போராட வேண்டுமென்று, விசுவாசத்தில் தளர்ந்து போய், தாங்களும் மற்ற மனிதர்களைப் போல் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள்.
 இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் ``இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த
வேஷந்தரியாமல், (ரோமர் 12:2) என்று வேதம் கூறுகிறது. பிரபஞ்சம் என்று வேதம் எதைக் குறித்து கூறுகிறது ``உலக அமைப்பு''. உலக அமைப்பு என்பது மனிதர்களால் அவ்வப்போது தங்கள் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ப தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொள்ளும் தேவனுக்கு விரோதமான கொள்கைகள், இதற்கு உட்பட்டு விசுவாசிகள் வாழக்கூடாது என்றே வேதம் போதிக்கிறது.
ஆனால், விசுவாசிகள் விசுவாச வாழ்வுக்குள் இல்லாதவர்களை உற்றுக் கவனிக்கும் பொழுது, கலப்பட வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். சபைக்குப் போகும் பொழுது வேதத்தின் படியாகவும், வீட்டிற்கு வந்தவுடன் உலக அமைப்புக்குள்ளாகவும் இருந்து, மாய்மாலவாழ்க்கை வாழ ஆரம்பித்து, ஒரு நாளிலே முழுவதுமாக விலகிச் சென்று விடும்படியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
``தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, என்னை விட்டுப் பிரிந்து.... போய் விட்டான் (2 தீமோ 4:10). இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தேவனுக்கு விரோதமான கொள்கையை உலக மக்கள் அதிகமான பேர் பின்பற்றுவதால், குறைவான சதவீதம் கொண்ட மக்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வேதாகமம் போதிக்கும் கொள்கையானது கடினமாகத் தோன்றி, ``தேவையில்லாமல் நாம் நம்மை நாமே ஒடுக்கிக் கொள்கிறோமோ'' என்று சந்தேகப்பட்டு, மனம் கடினப்பட்டு உலக அமைப்புக்குள்ளாக தங்களையும் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதால் பின்மாற்ற நிலைக்கு செல்கிறார்கள்.
வேதம் கூறுகிறது, ``விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப் போகப் பின் வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.''(எபி 10:38,39).
மோசேயைக் குறித்து வேதம் கூறும் பொழுது ``அநித்தியமான பாவ சந்தோஷங்களை, அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்'' (எபி 11:25,26)
ஆகவே, உலகமும் உலக அமைப்பும் கிறிஸ்துவை பின்பற்றாத மனிதர்களும் நமக்கு முன்மாதிரி அல்ல, வேதமும் இயேசு கிறிஸ்துவுமே முன்மாதிரி என்று, பின் பற்றுவோரின் வாழ்வில் தேவன் பிரியாமலிருப்பார். பின் மாற்றமென்பது குறைந்து உலகம் விசுவாச வாழ்வுக்கு நேராகத் திரும்பும்.



இயேசுவின் வார்த்தைக்கும், செயலுக்கும் முரண்பாடா?


இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மனித சரித்திரத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் சொல்லி மற்றவர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை காரணம் அதற்கு சரித்திரம் சாட்சி சொல்லும். இயேசுவானவர் போதித்தவர் மட்டுமல்ல, அவரது  போதனைகளை அவர் தனது மானுட வாழ்வில் கடைப்பிடித்து காண்பித்தவர். உலகில் எத்தனையோ தத்துவங்களும் தத்துவ ஞானிகளும் தோன்றி மறைந்திருக்கின்றனர், அவர்களெல்லாம் தங்கள் வார்த்தைகளின் படி நடந்தார்களா?

Jeeva Appam Magazine (ஜீவ அப்பம் மாத இதழ் ) August 2013 pdf

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, 2013 ஆகஸ்ட்  மாத ஜீவ அப்பம் மாத இதழை PDF வடிவில் கீழே கொடுத்திருக்கிறோம். பதிவிறக்கி வாசித்து தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும் படியாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


கிறிஸ்துவின் உன்னத பணியில்
பாஸ்டர்: V.S. லூர்துராஜ்
ஜீவ அப்பம் ஊழியங்கள்
&
 ஜீவ அப்பம் திருச்சபை 


Download link