Bread of Life Church India

உன்னை மேன்மைப்படுத்துவேன்


இம்மாத ஆசீர்வாத வாக்குத்தத்தம் இதை வாசித்து தேவனுடைய பெரிதான கிருபைகளையும், நன்மைகளையும் சுதந்தரித்துக் கொள்வோம்.
"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்''(யோசுவா 3:7).

இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பை திறன்பட செய்து விட்டு கர்தருக்குள் மோசே நித்திரை அடைந்த பின், அந்த பொறுப்புக்கு யோசுவா தேவனால் நியமிக்கப்படுகிறார். மோசேயை இஸ்ரவேல் மக்கள் ஏற்றுக்கொண்டது போல தன்னையும் ஏற்றுக்கொள்வார்களா? என்ற அச்சம் ஒருவேளை யோசுவாவுக்குள்ளாக இருந்திருக்கலாம், ஆகையால் தேவன் யோசுவாவிடம் ''நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை''(யோசுவா 1:5). என்று  சொல்லுகிறார்..
இந்த வாக்குத்தத்த வார்த்தையோடு கூட, சில கட்டளைகளையும் கொடுத்து, தேவன் மறுபடியுமாக யோசுவாவைப் பார்த்து,  "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்''( யோசுவா 1:9)
இதற்கு பிறகுதான் "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்''(யோசுவா 3:7). என்று வாக்குப்பண்ணுகிறார்.
இதில் மூன்று வகையான செய்திகளைக்காணலாம்
1. உன்னோடு இருப்பேன்
2. நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
3. நான் உன்னோடு இருப்பதை எல்லா கண்களும் காணும் படி செய்வேன்

தேவன் கூட இருப்பதை எல்லா மக்களும் அறிந்து கொள்ளும்மடிக்கு “உன்னை மேன்மைப் படுத்துவேன்’’ மேன்மை என்ற வார்த்தைக்கு தமிழில் மூன்று வகையான வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும்.

1.சிறப்பு (Excelence)
2. பெருமை (Greatness)
3.கௌரவம் (Honour)

இவ்விதமாக கர்த்தர் நம்மை நடத்தப்போகிறார். கர்த்தர் நம்மோடு இருக்கும் போது நாம் சிறப்பானவர்கள்தான். நம்மை நாமே மேன்மைப்படுத்திக்கொள்வதோ, சிறப்பித்துக்கொள்வதோ தேவன் விரும்ப மாட்டார், அதே போல் நம்மை நாமே பெருமைப்படுத்தக்கொள்ளவோ, கௌரவ படுத்திக்கொள்ளவோ செய்தால் தேவன் நமக்கு எதிர்த்து நிற்பேன் என்று சொல்லுகிறார். ஆனால் கர்த்தர் சொல்லும் பொழுது “உன் பெயரை பெருமைப்படுத்துவேன்’’ என்று சொல்லுகிறார். “தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்’’ என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை உயர்த்த விரும்புகிறார். இதில் உள்ள வித்தியாசத்தை நாம் சரியாக அறிந்து, உணர்ந்து செயல்படவேண்டும்.

கர்த்தர் எதற்காக நம்மை மேன்மைப்படுத்துகிறார். அவர் நம்மோடு கூட இருப்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. கர்த்தர் நம்மோடு கூட இருப்பதற்கு  நாம் என்ன செய்ய வேண்டும் அவருடைய வார்த்தைக்கு உண்மையாக கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

"உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.''( உபாகமம் 28:1) என்று வேதம் சொல்லுகிறது.
ஆகவே கர்த்தர் நம்மை மேன்மைப்படுத்த விரும்புகிறார். எங்கெல்லாம் யார் முன்பாக நம்மை மேன்மைப்படுத்துவார் என்றால்.

1. நமது சொந்த ஜனங்கள் மத்தியில், தேவனை அறிந்தவர்கள் மத்தியில்.
2. மற்ற உலக மனிதர்கள் மத்தியில், தேவனை அறிந்திராத மக்கள் மத்தியில்

இப்படியாக யோசுவாவுக்கு வாக்குத்தத்தம் செய்த "கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்'' ( யோசுவா 4:14). என்று வேதம் சொல்லுகிறது.

பயந்திருந்தார்கள் என்றால் கர்த்தரின் நிமித்தமாக, யோசுவா வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்தார்கள் என்றும் அவரை கனப்படுத்தினார்கள் என்றும், அவருக்குக்கு கீழ்ப்படிந்தார்கள் என்றும் நாம் அர்த்தம் கொள்ளலாம்.

பிரியமானவர்களே, இப்படியாக யோசுவாவுக்கு வாக்குப்பண்ணின கர்த்தர் அதை அவருடைய வாழ்க்கையில் நிறைவேறப்பண்ணினார். அதே போல இம்மாதத்தில் இந்த வாக்குத்தத்ததை நமக்கு கொடுத்திருக்கும் கர்த்தர் நமது வாழ்விலும் நிறைவேறப்பண்ணுவார். நாம் எல்லாவற்றிலும் மேன்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை உயர்த்துகிறார் விசுவாசித்து ஜெபியுங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக. ஆமேன்.   



0 comments:

Post a Comment