Bread of Life Church India

தேவ நியமனமும்! சீரழியும் சமுதாயமும்!!

இன்றைய நவீன சமுதாயத்தின் புரட்சிகளை பார்க்கும் பொழுது, மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது? இக்காலத்தில் பாலின உறவுகளை பொறுத்தமட்டில் எல்லா நல்லொழுக்க வரம்புகளையும் அது நீக்க விரும்புகிறது.

       வேறுயாரும் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எந்த விதமான பாலின நடக்கைகளும் சரிதான்என்று சில நவீன கால முட்டாள்கள் சொல்லுகின்றனர்.

      இப்படி சமுதாய சீர்கேடுகளின் போக்கு,“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத் 24:37) என்று இயேசு கிறிஸ்து கூறியது போல், நடந்து வருகின்றன.

        பாலின உறவுகள் தகாத விதமாயும், கட்டுப்பாடற்ற விதத்தில் செயல்படும் மாம்ச (காம) இச்சையும், மனைவிக்கும், மகளுக்கும், சகோதரிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக பாவித்து உறவு கொள்ளும் பாவமும்,  ஓரின சேர்க்கைகளும் கள்ள உறவுகளும் இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடூர பாவத்துக்குள்ளாக உழன்று கொண்டிருக்கும் சில மனிதர்களை குறித்த சம்பவங்களை. செய்தித்தாள்களில் காணும் போது பாவத்தின் அகோரம் மனிதர்களிடம் கரை புரண்டோடுவதை காட்டுகிறது. இவைகளெல்லாம் பாவத்தின் உச்சத்தை அறிவிக்கின்றன.
உலகத்தின் சட்ட அமைப்புக்களும் மனிதர்களுக்கு ஏற்றவிதத்தில் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன ஒருவனுக்கு ஒருத்திஎன்கிற சட்டம் தற்போது தளர்த்தப்பட்டு,“பாதுகாப்போடு (எத்தனை நபர்களோடும்) உறவுகொள்என்பதாக உள்ளது. சில மதங்களில், ஆண்கள் பல திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

       சில மதங்களில், கடவுள்களும், பல திருமணம் செய்திருப்பதாக அவர்கள் புராணங்களில் எழுதப்பட்டுள்ளன.
ஆனால் இதைக் குறித்து வேதாகமத்தில் பார்க்கும் போது இப்படிப்பட்ட மனிதர்கள் உருவான சரித்திரத்தைக் காணலாம். பரிசுத்த தேவனுடைய கட்டளையை மீறி, தங்கள் விருப்பப்படியெல்லாம் தேவனற்றவர்களாய் வாழ்ந்து வந்த காயீனின் சந்ததியில் வரும் லாமேக்குஎன்பவனே முதன் முதலில் தேவனால் நியமிக்கப்பட்ட கட்டளையாகிய ஒருவனுக்கு ஒருமனைவிதான் ஒருத்திக்கு ஒருவன்தான்’’என்பதை மீறி, இரண்டு பெண்களை திருமணம் செய்தவன் என்ற சாதனைக்கு சொந்தக்காரன் (ஆதி 4:19).
இது நாளடைவில் அக்கால மனிதர்களிடையே பரவி, ஒழுக்க கேடுகள் மிகவும் பெருகி, பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியை பார்த்தார். இதோ, அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின் மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள் (ஆதி 6:11,12) பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக
          “கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்என்றும், அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது என்றும், தேவன் அக்கால பூமியை தண்ணீரினால் அழித்தார்.என்றும் வேதம் சொல்லுகிறது.

            ‘சோதோம்பட்டணத்தை குறித்து பார்க்கும் பொழுது, ஓரின உறவு கொள்ளத்துடிக்கும் அக்கிரமமான செயலிலும், முறைதவறி பாலின உறவுவைத்துக் கொள்ளுதலிலும், அந்த பட்டணத்து ஜனங்களின் பாவம் அதிகமானதால் அவர்களின் அழிவுக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. (ஆதி 19:4,5)

     
அதே வேளையில், இச்சூழ்நிலையில் காக்கப்பட்ட லோத்தின் குமாரத்திகள் நீதிமானாகிய தங்கள் தகப்பனின் நிமித்தமாக தேவனால் தங்கள் குடும்பம் காக்கப்பட்டதையும் மறந்து, தாங்கள் சோதோம் பட்டணத்து சூழ்நிலையில் நடந்து கொண்டிருந்த பொல்லாத பாவத்தையே, மனதில் நிறுத்தி தங்களுக்கு சந்ததி வேண்டுமென்று அப்பட்டணத்து முறையின்படியே தங்கள் தகப்பனிடமே, பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். (ஆதி 19:31,32)
இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடுகளினால் தான் சோதோம் அழிக்கப்பட்டது என்பதையும் மறந்து, தங்களின் அழிவை தாங்களே தேடிக் கொண்டார்கள்.

இக்காலத் தலைமுறையிலும் ஓரினசேர்க்கையை விரும்பி சிலர் பொல்லாத வழிகளில் சென்று கொண்டு இருக்கின்றனர். இதை சில தேச சட்டங்களும் அனுமதித்து வருவது வேதனையான விஷயம். இதெல்லாம் அழிவுக்கு ஆரம்பம். 

      ஒவ்வொரு மனிதனும் நன்றாய் அறிந்து கொள்ள வேண்டியது. மற்ற உலக மனிதர்களின் வாழ்க்கை முறையல்ல. தேவன் மனிதர்களுக்கு வைத்திருக்கும் வாழ்க்கை முறையும், அவருடைய திட்டமுமே முக்கியம். அதையே கைக் கொண்டு அதன்படியே நடக்க வேண்டும்.
மற்றவைகளெல்லாம் பிசாசினால் உண்டாக்கப்பட்டு அவனால் தூண்டிவிடப்படும் அழிவுக்கு நேரான வழிகள். இந்த கடைசி காலங்களிலும் மனிதர்கள் அதிகமானோர் வீழ்ந்து போவதும் இப்படிப்பட்ட முறையில்லாத தேவனால் அங்கீகரிக்கப்படாத ஒழுக்க கேடுகளினால்தான்.

அதே வேளையில் வேதனையான காரியம் கிறிஸ்தவ மக்களிடமும் இப்படிப்பட்ட ஒழுக்ககேடான செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சிலருடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.
சிலருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இரட்டை மனிதர்களாய் முகமூடி அணிந்து கொண்டு, முறைகெட்டவர்களாய், தரங்கெட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

      கிறிஸ்துவின் சாயலில் இருக்க வேண்டியவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது தேவனுடைய பார்வையில் பெரிய பாவம் ஆகும்.

இப்பாவ செயல்கள் தேவனின் கட்டளையை மீறிய செயலாகும். திருமண நல்லுறவை அசுத்தப்படுத்துவதாகும், வாழ்க்கைத் துணையே அன்றி வேறொருவருடன் கொள்ளும் எந்த பாலுறவும், தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகும்.

      திருமணத்திற்கு முன்பு ஒருவர் பாலுறவு பற்றிய காரியத்தில், இச்சையடக்கத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் பாலுறவின் நெருக்கம் திருமணத்திற்குரியது ஆகும்.
திருமண உறவுகள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு அவரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய தீர்மானத்தின்படி திருமணத்தில் கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாக்கப்படுகிறார்கள். ஆகவே திருமணத்திற்கு முன்னும் பின்னும் ஒருவர் திருமண ஒழுக்கத்தை மீறி துணிந்து தவறு செய்யக் கூடாது.

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமாயிருப்பதாக. வேசிக்கள்ளரையும், விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்என்று வேதம் எச்சரிக்கிறது. (எபி 13:4)
     தேவனுடைய சட்டங்களை மீறுவதோ, உடைப்பதோ மெய்யான சுயாதீனத்தைக் கொண்டுவராது. மாறாக அடிமை நிலைக்கே கொண்டு செல்லும். வேதாகமத்தில் இப்படிப்பட்ட பாவம் செய்தவர்களின் தண்டனைகளை குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.      
ஆகவே இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு அழைக்கப்பட்டுள்ள தேவபிள்ளைகளிடம் இவ்விதமான கெட்ட நடவடிக்கைகள் இருக்கவே கூடாது. மீறி அப்படி இருந்து கொண்டு, தங்களுக்கென்று ஒரு நியாயத்தை ஏற்படுத்திக் கொண்டு, தங்களை தாங்களே சமாதானப் படுத்திக் கொள்ள பழைய ஏற்பாட்டில் மனிதர்களுக்கு பல மனைவிகள் என்று எழுதப்பட்டுள்ளதே என்று மேற்கோள் காட்டக்கூடாது. எக்காலத்திலும் அது தேவனால் அங்கிகரிக்கவும். அனுமதிக்கவும்படவில்லை. சில வேதாகம புருஷர்கள் மற்ற மனிதர்களையும், தேசங்களையும் பார்த்து தேவ கட்டளைக்கு கீழ்படியாமல் தேவசித்தமில்லாமல் ஏற்படுத்திக் கொண்டதே,
அது அவர்களுக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் இடறலாகவும், தோல்வியாகவும், தேவனைவிட்டு விலகி செல்லவும் காரணமாக இருந்தது எனறு வேதம் சொல்லுகிறது. <உ.தா. சாலொமோன்                          (1 இராஜா 11:1_14,23)

     தேவன் அங்கிகரிப்பதும் அனுமதிப்பதும்தான் தேவ ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தையும் சமாதானத்தையும் நித்திய வாழ்வையும் கொடுக்கும்.

     ஆகையால், பிரியமானவர்களே ! இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாயிற்று, இக்கால உலகம் அக்கிரம மிகுதியினால்சீர்கெட்டு போய் கொண்டிருக்கிறது. கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களும் வஞ்சிக்கப்படும் காலத்துக்குள் சென்று கொண்டிருக்கிறோம்.
    கிறிஸ்தவ சமுதாயம் அவருடைய வருகையை எதிர்நோக்கி, கிறிஸ்து அல்லாத ஜனங்களுக்கு அவரை அறிவித்து அவருடைய நித்திய இராஜ்யத்துக்கு அவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்ற தேவ எச்சரிக்கையை அறிவிப்போம். நாமும் தகுதியுள்ளவர்களாய் தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்வோம். வருகையிலே எடுத்துக் கொள்ளப்படுவோம்.







0 comments:

Post a Comment